Monday, October 27, 2014

நடிகருக்கு பாலாபிஷேகம் ஆனால் ரசிகருக்கு கிடைத்த பரிசோ மரணம்!!!!





(சிலையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் தீவிர ரசிகர்)



(இவரை மாதிரியானவர்கள், எப்போவாவது தங்களின் பெற்றோரை இப்படி வணங்கி இருப்பார்களா???)
 
தங்கள் அபிமான நடிக நடிகையரின் மேல் வைத்திருக்கும் அளவுக்கதிகமான வெறியை எப்போது தான் இந்த ரசிகர்கள் விலக்கிக்கொள்ளப்போகிறார்களோ? திரைப்படம் என்பதை ஒரு பொழுதுபோக்குக்கான அம்சமாக பார்க்காமல், அதில் நடித்திருக்கும் தங்கள் அபிமான நடிகர்கள் ஏதோ பெரிய சாதனையை செய்து விட்டார்கள் என்கிற கண்ணோட்டத்தில் பார்த்து, அவர்களை பாராட்டி, சீராட்டி கொண்டாடுகின்ற கூத்துக்களை எல்லாம் பார்க்கும்போது, இவனுங்க எல்லாம் என்னைக்கு தான் திருந்தப்போறாங்களோன்னு நினைக்கத் தோன்றும். சில வருடங்களுக்கு முன்பு, நடிகை குஷ்பூவின் அதிதீவிர ரசிகர்கள் அவருக்கு ஒரு கோயிலை எழுப்பி ஒரு மானங்கெட்ட செயலை செய்தார்கள். இப்போது நடிகர் விஜய்யின் உருவ சிலையை வடிவமைத்து, நீங்கள் குஷ்புவிற்கு கோயில் எழுப்பினால், நாங்கள் எங்கள் நடிகருக்கு சிலை எழுப்புவோம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். அந்த சிலை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கு வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இப்படி ரசிகர்கள் பைத்தியமாய் நடிகர்களின் பின்னால் அலைகிறார்கள். இப்படி தங்களின் குடும்பத்தை கவனிக்காமல் பொறுப்பில்லாமல் இருப்பவர்களை என்ன சொல்வது!. உண்மையில் இவர்களால், இவர்களது குடும்பம் நன்மை அடைந்திருக்குமா என்பது கேள்விக்குறியே தான்.





 
சரி, இவர்களாவது பரவாயில்லை, தங்களின் பணத்தையும் நேரத்தையும் தான் வீனடித்திருக்கிறார்கள். வேறு ஒரு ரசிகரோ, தன்னுடைய உயிரையே அந்த நடிகருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். கத்தி படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ஒரு ரசிகர், அங்கே வைக்கப்பாட்டிருந்த நடிகர் விஜய்யின் மெகா கட்அவுட்டிற்கு, பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எண்ணி, அந்த கட்அவுட்டின் மேல் ஏறி பாலாபிஷேகம் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கால் தடுக்கி கீழே விழுந்து உயிர் துறந்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்தது தமிழ்நாட்டில் இல்லை, கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் வடக்கன்சேரியாகும். அந்த ரசிகரின் பெயர் உன்னியாம். விலைமதிப்பில்லாத உயிரை, நடிகருக்கு பாலாபிஷேகம் செய்யப்போய் மாய்த்திருக்கிறார். சில காலங்களுக்கு முன்பு, விஜய்,அஜீத் ரசிகர்கள் மோதிக்கொண்டு, உயிர் விட்ட சம்பவங்களும் நடந்தேறியிருக்கின்றன.

இம்மாதிரியான ரசிகர்கள் ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் ஹைடெக் ரசிகர்கள், அதாவது முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களின் நடிகர்களை பின் தொடர்பவர்கள்.இவர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களோடு நேருக்கு நேர் மோதிக்கொள்ளாமல், இணையம் வாயிலாக மோதிக்கொள்பவர்கள்.

இந்த நடிகர்கள் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடிக்கிறவர்கள். பாழாய்ப்போன இந்த ரசிகர்கள் தான் தங்களின் கைக்காசைப்போட்டு அவர்களின் படத்தை பார்த்து, அதனை ஓட வைப்பவர்கள். இவையெல்லாம் தெரிந்தும் கூட, இந்த பைத்தியக்கார ரசிகர்கள் அவர்களின் பின்னால் சென்று தங்கள் வாழ்க்கையை தொலைப்பது தான் வேதனையான விஷயம்.
 
பின்குறிப்பு:
கேரள ரசிகர் உயிர் இழந்த சம்பவம் அந்த நடிகருக்கு தெரிந்திருக்குமா?

(படங்கள் உதவி - தட்ஸ்தமிழ் இணையம்)

Thursday, October 23, 2014

தலை தீபாவளி - நாடகத்தின் காணொளி






இன்னும் கால் மணி நேரத்தில் எங்களுக்கு தீபாவளி முடியப்போகிறது.சென்ற ஆண்டு தீபாவளி விடுமுறை தினத்தில் வந்தது மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த மாதிரி எல்லாம் எதுவுமில்லை. அலுவலகத்தில் சொல்லிவிட்டு ஒரு மூன்று மணியைப் போல் கிளம்பலாம் என்று நினைத்தேன், ஆனால் அதுவும் முடியவில்லை. மற்ற நாட்களை போலவே இந்த நாளும் கழிந்தது ஒரு சிறிய வித்தியாசத்தோடு - மாலை வீட்டிற்கு வந்து சாமி கும்பிட்டு, தீபாவளி பலகாரங்களை சாப்பிட்டுவிட்டு, இரண்டு மூன்று கம்பி மத்தாப்புகளை வீட்டின் பின்பக்கத்தில் கொளுத்திவிட்டு, இதோ வலைப்பூவிற்குள் நுழைந்துவிட்டேன் . 

எதை எழுதலாம் என்று மண்டையை காய விடாமல், 2012 ஆம் ஆண்டு நான் எழுதி மேடையேற்றிய "தலை தீபாவளி" நாடகத்தின் காணொளியை போடலாம் என்று நினைத்தில் வந்த பயன் தான் இந்த பதிவு. இந்த நாடகத்தின் உரை நடையை சென்ற ஆண்டு வெளியிட்டிருந்தேன். 

நாடகத்தை வேறொரு நண்பர் தன்னுடைய அலைபேசியில் படம்பிடித்திருந்தார். அது தரமான காணொளியாக இல்லை, அதனால் மீண்டும் அந்த நாடகத்தின் உரைநடையையும் வெளியிட்டு, காணொளியும் வெளியிடுகிறேன். 

இந்த நாடகம் இரண்டு தலைமுறையினர் எவ்வாறு தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள் என்பதை சற்று நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறேன். இந்த ஒரு சின்ன விஷயத்துக்கு போயா இப்படி சண்டை போடுவார்கள் என்று நீங்கள் நினைக்க கூடும். விஷயம் சின்ன விஷயம் தான், ஆனால் "மாப்பிள்ளை முருக்கு" என்று ஒன்று மாப்பிள்ளையிடம் இருக்கும். அதன் வெளிப்படு தான் அந்த சண்டை. 


இனி அந்த நாடகத்தை காணொளியில் கண்டுகளியுங்கள். ஏதாவது புரியவில்லை என்றால், இந்த உரையை பார்த்துக்கொள்ளுங்கள். 



தலை தீபாவளி

கதாபாத்திரங்கள்:

  1. ஈஸ்வரன் – மதுரையில் வசிப்பவர்
  2. பார்வதி   – ஈஸ்வரனின் மனைவி
  3. ஆதித்தன் – ஈஸ்வரனின் மருமகன்
  4. ஆராதனா – ஈஸ்வரனின் மகள்
  5. கபிலன்   – ஆதித்தனின் நண்பன்
  6.  முகிலன்  – ஆதித்தனின் மருமகன்
  7. கயல்விழி – ஆதித்தனின் மகள்

முன்னுரை:

இந்த நாடகம் ஒரு குடும்ப நாடகம். இரண்டு தலைமுறையினர் எப்படி தலை தீபாவளியை கொண்டாடுகின்றனர் என்பதை நகைச்சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது. மதுரையில்,ஈஸ்வரனும், பார்வதியும் வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு பெண் ஆராதனா. அவளுக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் ஆதித்யனுக்கு திருமணம் செய்து, மெட்ராஸுக்குஅனுப்பிவைத்தார்கள். இனி நடப்பதை பாருங்கள்.

காட்சி – 1:

இடம் - (மதுரை – ஈஸ்வரன் வீடு)

காலம் – 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். 


கதாப்பத்திரங்கள் – ஈஸ்வரன், பார்வதி,

(ஈஸ்வரன் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்).

ஈஸ்வரன்: பாரு, பாரு, கொஞ்சம் காபி கிடைக்குமா?


பார்வதி: இந்த காப்பிக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஒரு நாளைக்கு எத்தனை தடவை தான் காப்பி குடிப்பீங்களோ!. ஆமா, ரிட்டையர் ஆகி வீட்டுக்குள்ள, சும்மாதானே இருக்கீங்க. இந்த முறுக்கு மாவை கொஞ்சம் பிழிஞ்சு கொடுக்கிறதுக்கு என்னவாம்?

ஈஸ்வரன்: ஏண்டி, இவ்வளவு பெரிய உருவத்தை வச்சுக்கிட்டு உன்னாலையே பிழிய முடியலைன்னா, என்னால மட்டும் எப்படி பிழிய முடியும். 


பார்வதி: என்னைய மாதிரி உங்களால ஆக முடியலைன்னு, உங்களுக்கு பொறாமை. எப்பவுமே மனசுல வஞ்சனை இல்லாம இருந்தாதான் உடம்பு நல்லா வளரும்.

ஈஸ்வரன்: அப்ப, நான் என்ன கெட்டவன்னு சொல்றியா?


பார்வதி: உங்களை, அப்படி எல்லாம் நான் சொல்லுவேனா. பொம்பளை நானே,என்னைக்காவது உங்க அப்பா அம்மாவைப் பத்தி குறை சொல்லியிருக்கேனா? ஆனா, நீங்க எப்ப பாரு, எங்கப்பாவையே குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்க.

ஈஸ்வரன்: ஏண்டி, உங்கப்பா சொன்ன சொல்லை காப்பாத்தி இருந்தாருன்னா, நான் ஏன் அவரை குறை சொல்லப் போறேன். தலை தீபாவளிக்கு போடுறேன்னு சொன்ன மோதிரத்தை,அடுத்த தீபாவளிக்கு போடுறேன்னு சொல்லி சொல்லியே, 24 தீபாவளி முடிஞ்சுடுச்சு. இதோ 25வது தீபாவளியும் வரப்போகுது. உங்கப்பா இன்னமும் எனக்கு அந்த மோதிரத்தை போடலை. அப்புறம் நான் உங்கப்பாவை குறை சொல்லாம எப்படி இருக்க முடியும். 


பார்வதி: ஏங்க!!, இன்னமுமா அதை நியாபகம் வச்சிருக்கீங்க? ஏதோ, எங்கப்பாவால போட முடியாம போயிடுச்சு. அதுக்காக நீங்க இப்படி சொல்லிக்காட்டுறது கொஞ்சம் கூட நல்லா இல்லைங்க.

ஈஸ்வரன்: செய்யுறேன்னு சொல்லிட்டு, செய்யலைன்னா, சொல்லித்தானே காட்டுவாங்க. இதுல நாங்க இப்படி பேசக்கூடாதாம். இது எந்த ஊரு நியாயம். 


பார்வதி: நீங்க சொல்லிக்கிட்டே இருங்க. எனக்கென்ன, நான் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுற போறேன். சரி, சரி, தலை தீபாவளின்னு சொன்னவுடனே தான் எனக்கு நியாபகம் வருது, வர்ற 17ஆம் தேதி தான் தீபாவளி. நம்ம மாப்பிள்ளைக்கு போடுறதுக்கு மோதிரம் வாங்கிட்டீங்களா?

ஈஸ்வரன்: எவடி, இவ. என்னைய என்ன இனா வாயன்னு நினைச்சுக்கிட்டியா, உங்கப்பாவே அவரோட மாப்பிளைக்கு ஒண்ணும் செய்யலையாம், நான் மட்டும் எப்படி என் மாப்பிளைக்கு செய்யுறது. 


பார்வதி: அப்ப, மாப்பிளைக்கு மோதிரம் போட மாட்டீங்களா?

ஈஸ்வரன்: மாட்டேன். இத பாரு, துணிமணி எல்லாம் எடுத்துக் கொடுப்போம், போட்டுக்கட்டும். ஆனா, இந்த மோதிரம், அப்புறம் துணிமணி கொடுக்கும்போது, பணம் வச்சுக் கொடுக்கிறது,இதெல்லாம் கிடையவே கிடையாது. 


பார்வதி: ஆண்டவா, இந்த மனுசனுக்கு புத்தி ஏன் தான் இப்படி போகுதோ? தீபாவளி அன்னைக்கு என்ன நடக்கப் போகுதோ? பிள்ளையாரப்பா, தீபாவளி நல்ல படியா முடிஞ்சா,உனக்கு ஒரு தேங்காய உடைக்கிறேன்.

ஈஸ்வரன்: அட!அட!, இதுக்கெல்லாம் போயி ஏன்டி கடவுளை கூப்பிடுற. அவருக்கு எவ்வளவோ வேலை இருக்கும். இதுல அவருக்கு லஞ்சம் வேறயா. மனுஷங்களுக்கு லஞ்சம் கொடுத்து கெடுத்தது பத்தாதுன்னு, இப்ப கடவுளுக்கும் லஞ்சம் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா?இங்கப் பாரு,தீபாவளி அன்னைக்கு எந்தப் பிரச்சனையும் வராது. வந்தாலும் நான் சமாளிச்சுக்குறேன். 


பார்வதி: என்னமோ போங்க, தீபாவளி அன்னைக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. அப்படி ஏதாவது வந்துச்சுன்னா, இதோ இந்த மோதிரத்தை கழட்டி, மாப்பிள்ளைக்கிட்ட கொடுத்துடுவேன்.

ஈஸ்வரன்: அப்படி, எதுவும், பண்ணி கிண்ணி, வச்சுறாதேடி. ஆமா இந்த மோதிரத்தை உனக்கு நான் எப்ப போட்டேங்குறதை மறந்துட்டியா?.  


பார்வதி: அது எப்படிங்க மறப்பேன். நம்ம ஆராதனா பொறந்து, நான் ஆஸ்பத்திரில இருக்கும்போது, என்னையும், குழந்தையையும் பார்க்க வந்த நீங்க, ஆசை ஆசையா எனக்கு போட்ட மோதிரமாச்சே.

ஈஸ்வரன்: மறக்காம நியாபகம் வச்சிருக்க. அப்புறம் எப்படிடி அதை மாப்பிள்ளைக்கிட்ட கொடுப்பே?


பார்வதி: அன்னைக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து, உங்களால சமாளிக்க முடியாலைன்னா,இது தான் அந்த பிரச்சனைக்கு தீர்வு. இதை நியாபகம் வச்சுக்கிட்டு நடந்துக்குங்க. (போகிறாள்)
ஈஸ்வரன்: இப்ப நான் கடவுளை கூப்பிடணும் போல இருக்கே. ஆண்டவா, தீபாவளி அன்னைக்கு மாப்பிள்ளை எந்த பிரச்சனையும் பண்ண கூடாது. எல்லாம் நல்ல படியா முடிச்சுக் கொடுப்பா. 


காணொளி:



   

இடம் - (சென்னை – ஆதித்தன் வீடு)

கதாப்பத்திரங்கள் – ஆதித்தன், கபிலன், 


(ஆதித்தன் பொன்னியின் செல்வன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான்அப்போது கபிலன் உள்ளே வருகிறான்)

ஆதித்தன்: வா, கபிலா. எப்படி இருக்க? உட்காரு. 


கபிலன்: நான் நல்லா தான் இருக்கேன் ஆதித்தா. ஆமா , என்ன பொன்னியின் செல்வனா படிச்சுக்கிட்டு இருக்க? எத்தனை தடவை தான் அதை படிப்ப?

ஆதித்தன்: எத்தனை தடவை படிச்சாலும், அலுக்காத ஒரு நாவல்னா, அது இது தான். நீ தான் ஒரு தடவை கூட இதை படிக்கலையே?


கபிலன்: நீயும் நிறைய தடவை சொல்லிட்ட, சரி, இன்னைக்கு கொடு, நான் படிச்சுப் பார்க்குறேன். ஆமா, எங்க தங்கச்சிய காணோம்?

ஆதித்தன்: நாம தான் பட்டாசு எல்லாம் வாங்கிக்கிட்டு மாமனார் வீட்டுக்கு போகனுமாமே.எனக்கு இந்த பட்டாசுன்னாலே அலெர்ஜி ஆச்சே, அதான், அவ வாங்க போயிருக்கா. ஆமா,எங்க உன் வீட்டில ஆள காணோம்?


கபிலன்: பக்கத்து வீட்டு மாமிக்கு, ஏதோ புடவை எடுக்கணுமாம், அதான் இவளையும் கூட்டிக்கிட்டு போயிருக்காங்க.

ஆதித்தன்: சரி, இந்த வருஷம் நம்ம ரெண்டு பேருக்குமே தலை தீபாவளி. நீ எத்தனை நாள் லீவு போட்டிருக்க?


கபிலன்: நான் 4 நாளு லீவு போட்டிருக்கேன்.

ஆதித்தன்: என்னது 4 நாளா! அவ்வளவு நாள் எல்லாம் மாமனார் வீட்டில போய் இருக்க கூடாதுடா. அப்புறம் நம்ம prestige என்னாகுறது? நான் பாரு ரெண்டே நாள் தான் லீவு போட்டிருக்கேன். 


கபிலன்இல்லடா, தலை தீபாவளிக்கு கூப்பிடுறதுக்காக மாமனார் வந்தபோது, “மாப்பிள்ளை நாலைந்து நாள் லீவு போட்டுக்கிட்டு வாங்க. தீபாவளி அன்னைக்கு ரிலீஸ் ஆகுற மைக்கேல் மதன காமராஜன் படம் போய் பார்க்கலாம். அப்புறம் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கிட்டு போங்கன்னு சொன்னாருடா.

ஆதித்தன்: அடப்பாவி, படத்துக்கு எல்லாம் வேற போறீங்களா?


கபிலன்: ஆமாண்டா, அப்புறம் எனக்கு மோதிரம் போடுறதுக்கு விரல் அளவு எல்லாம் எடுத்துக்கிட்டு போனாங்க.

ஆதித்தன்: விரல் அளவு எல்லாம் எனக்கு எடுக்கவேயில்லையே!.


கபிலன்: உன் விரல் ரொம்ப சின்ன விரல் இல்ல, அதுனால அவுங்களுக்கே தெரியுமா இருக்கும். ஆமா, என்ன மோதிர விரல்ல பிளாஸ்திரி போட்டிருக்க?

ஆதித்தன்: அது வேற ஒண்ணும் இல்ல, நீ தான் சொன்னியே, என் விரல் ரொம்ப சின்னதா இருக்குதுன்னு. அதனால தேள் கடிச்சிடுச்சுன்னு சொல்லி, பிளாஸ்திரி போட்டிருக்கேன். அப்பதானே பெரிய மோதிரமா போட முடியும்.  


கபிலன்: அட பாவி, இப்படியெல்லாம் வேற யோசிக்கிறியா? பெரிய மோதிரம்னா உனக்கு ரொம்ப லுசா இருக்குமே?

ஆதித்தன்: மோதிரத்துல நூல் சுத்தி போட்டுக்க வேண்டியது தான். 


கபிலன்: ஏன்டா, உனக்கு இந்த வேண்டாத வேலை?

ஆதித்தன்: அதுக்கில்ல மாப்ள, நமக்கு தான் ஹிந்தி தெரியாது. எப்பவாது தேவைப்பட்டா, அந்த மோதிரமாவது போய் சேட்டு வீட்டில ஹிந்தி படிக்கட்டுமே. அப்ப மோதிரம் பெருசா இருந்தா தானே நமக்கு நல்லா இருக்கும். 


கபிலன்: கஷ்டம்டா சாமி. மாமனாருக்கு மொட்டை போடுறதுக்கு எப்படியெல்லாம் யோசிக்கிற. ஆமா, போன வாரம் ஆபிஸுக்கு ஒரு நாள் லீவு போட்டியே, இப்படியெல்லாம் யோசிக்கிறதுக்கு தான் லீவு போட்டியா?

ஆதித்தன்: சும்மா, கிண்டல் பண்ணாதடா. 


கபிலன்: சரி, உனக்கு, தலை தீபாவளின்னு ஏன் பேர் வந்துச்சு தெரியுமா?

ஆதித்தன்: அதான், நீ சொல்லிட்டியே, மாமனாருக்கு மொட்டை போடுறதுக்கு எப்படி எல்லாம் யோசிக்கிறேன்னு. மாமனார் தலையை மொட்டை அடிக்கிறதுனால தான் , அதுக்கு தலை தீபாவளின்னு பேர் வந்திருக்கு. 


கபிலன்: ச்சி! சும்மா காமெடி பண்ணாதே. கல்யாணம் ஆகி, முதல் தீபாவளியை கொண்டாடுறதுனால, அதுக்கு தலை தீபாவளின்னு பேரு. 



ஆதித்தன்: அப்ப ஏன் தலை பொங்கல்ன்னு சொல்றதில்லை?

கபிலன்: டேய், நீ இப்படி எல்லாம் விதண்டாவாதமா கேட்டா, நான் எப்படி பதில் சொல்றது?


ஆதித்தன்: உனக்கு தெரியலைன்னு சொல்லு. பொதுவா நம்ம கலாச்சாரத்துல ஆண்களோட ஆதிக்கம் தான் அதிகமா இருக்கும்.

கபிலன்: ஆமா இல்ல! கல்யாணம் முடிஞ்சவுடனே, பெண்கள் தான் அவுங்க பிறந்த வீட்டை விட்டுட்டு, கணவனோட வீட்டுக்கு வராங்க. ஆண்கள் யாரும் அந்த மாதிரி போறதில்லை இல்லை. 


ஆதித்தன்: ஆமா. பையன் வந்து எதுக்கும், பொண்ணு வீட்டில போய் தங்க மாட்டான். எல்லா விஷேசத்தையும், பையன் வீட்டுல தான் கொண்டாடுவாங்க. பொண்ணு வீட்டுக்கும் ஒரு முக்கியத்துவம் கொடுக்கணும்னு தான் கல்யாணம் முடிஞ்சு வர்ற முத தீபாவளியை தலை தீபவாளின்னு சொல்லி பொண்ணு வீட்டுக்கு போய் கொண்டாடுறோம்.

கபிலன்: அட, பரவாயில்லயே, உனக்கு மாமானரை எப்படி மொட்டை போடுறதுன்னு தான் தெரியும்னு நினைச்சேன். இதெல்லாம் கூட தெரிஞ்சிருக்கு. 


ஆதித்தன்: நீ வேற, இதெல்லாம் நான் மத்தவங்ககிட்டேருந்து கேட்டு தெரிஞ்சுக்கிட்டது. ஆனா,இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது.

கபிலன்: உண்மையோ இல்லையோ, ஆனா காரணம் நல்லாதான் இருக்கு. சரிடா, நான் கிளம்புறேன். ரொம்பவும் உன் மாப்பிள்ளை முறுக்கு எல்லாம் காட்டாம ஒழுங்கா தலை தீபாவளியை முடிச்சுட்டு ஊர் வந்து சேரு. 


ஆதித்தன்: உன்னுடைய அறிவுரைக்கு ரொம்ப நன்றி. இந்தா, இந்த புக் கேட்டியே. பொறுமையா படிச்சுட்டு, அடுத்த பாகத்தை வாங்கிக்கோ.  


காணொளி:





காட்சி – 3:
இடம் - (மதுரை – ஈஸ்வரன் வீடு)

கதாப்பத்திரங்கள் – ஈஸ்வரன், பார்வதி, ஆராதனா மற்றும் ஆதித்தன்


பார்வதி: ஏங்க, இன்னைக்கு 4 மணிக்கு, பாண்டியன் எக்ஸ்பிரஸ்ல தான் பொண்ணும்,மாப்பிளையும் வறேன்னு சொல்லியிருக்காங்க. நீங்க ஸ்டேஷனுக்கு போய் அவுங்களை கூட்டிக்கிட்டு வந்துடுங்க.

ஈஸ்வரன்: ஒண்ணு பண்றேனே, ஒரு தட்டுல வெத்திலை, பாக்கு வச்சுக் கொடு, நான் துண்டை இடுப்புல கட்டிக்கிட்டு ஸ்டேஷனுக்கு போய் அவுங்களை மரியாதையோடு அழைச்சுக்கிட்டு வரேன். 


பார்வதி: அட, இதுவும் நல்லா இருக்கே, (யோசித்துப் பார்த்து சிரிக்கிறாள்).

ஈஸ்வரன்: என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு. 


பார்வதி: இல்ல, நீங்க துண்டை இடுப்புல கட்டிக்கிட்டு, கைல தாம்பூல தட்டை வச்சுக்கிட்டு பவ்யமா நிக்கிறதை கற்பனை பண்ணிப் பார்த்தேன், ரொம்ப காமெடியா இருந்துச்சா, அதான் என்னைய மீறி சிரிச்சுட்டேன். இருங்க நான் போய் தட்டு, வெத்திலை பாக்கு எல்லாம் ரெடி பண்றேன்



ஈஸ்வரன்: ஏய், இரு, இரு, நான் ஒரு நக்கலுக்கு சொன்னா, அதுக்கு கண்ணு, காது எல்லாம் வச்சு பாக்குற. அதெல்லாம் நான் போகணும்னு ஒண்ணும் இல்ல. அவுங்களே வந்துடுவாங்க.

(அப்போது ஆராதனாவும், ஆதித்தனும் உள்ளே வருகிறார்கள்)


ஈஸ்வரன்,பார்வதி: வாங்க, வாங்க மாப்ள, வாம்மா ஆராதனா.

(ஆதித்தன் தலையை மட்டும் ஆட்டுகிறான். இந்தாங்க இதுல பட்டாசு இருக்கு. (ஆராதனா பையை பார்வதியிடம் கொடுக்கிறாள்)


ஈஸ்வரன்: மாப்பிள்ளை, பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா?.

ஆதித்தன்: எல்லாம் நல்லா இருந்துச்சு மாமா. 


(அப்போது பார்வதி சோம்பில் தண்ணி கொண்டுவந்து ஆராதனாவிடம் கொடுக்கிறாள். ஆராதனாவும் அதை ஆதித்தனிடம் தருகிறாள். ஆதித்தனும் குடித்துவிட்டு சொம்பை கீழே வைக்கிறான்)

ஈஸ்வரன் சரி மாப்பிள்ளை, நீங்க டையர்டா இருப்பிங்க. ரூம்ல போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க. 


(ஆதித்தன் போகிறான்)

பார்வதி: என்னம்மா ஆராதனா, எப்படி இருக்க? மாப்பிள்ளை உன்னைய நல்ல கவனிச்சுக்கிறாரா?


ஆராதனா: ரொம்ப நல்லா பார்த்துக்கிறார்மா. என்ன, கொஞ்சம் கோபம் ஜாஸ்தி. வாய்க்கு ருசியா செஞ்சா, நல்லா வெளுத்துக் கட்டுவார்மா.

பார்வதி: அப்படியெல்லாம் சொல்லக் கூடாதாம்மா. அப்புறம் உன் கண்ணே பட்டுடும். 


ஆராதனா: சரிம்மா, நான் இனிமே அந்த மாதிரி சொல்லலை. அப்பா அப்புறம், நாளைக்கு அவர் போட்டுக்கிறதுக்கு துணிமணி எல்லாம் வாங்கிட்டீங்களா? முக்கியமா மோதிரம் வாங்கிட்டீங்களா?

பார்வதி: உம், நல்லா கேளு. 


ஈஸ்வரன்: துணிமணி எல்லாம் எடுத்தாச்சு கண்ணு, இந்த மோதிரம் தான் வாங்கலை.

ஆராதனா: என்னது வங்கலையா. நாளைக்கு அவருக்கு மோதிரம் கிடையாதா? அவருக்கு ஏறக்கனவே கோபம் ஜாஸ்தி. இப்ப மோதிரம் இல்லன்னு சொன்னா, அவர் தாம் தூம்னு குதிப்பாரே?


ஈஸ்வரன்: ஆமாடா குட்டி. மோதிரம் வாங்க முடியாம போயிடுச்சு. நீ தான் மாப்பிள்ளையை ஏதாவது சொல்லி சமாதானப் படுத்தணும்.

ஆராதனா: என்னப்பா, இப்படி திடீர்னு ஒரு குண்டை போடுறீங்க. சரி, நான் எப்படியாவது சொல்லி சமாளிக்கிறேன். 


(மறு நாள் காலை. ஆதித்தன் உட்கார்ந்திருக்கிறான். அப்போது ஆராதனா தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு,காபியோடு வருகிறாள்)
ஆராதனா: அதுக்குள்ளா எந்திரிச்சு பல் விளக்கிட்டீங்களா! இந்தாங்க காபி. பாத்ரூம்ல வெந்நீர் ரெடியா இருக்கு. அப்புறம் தலைக்கு தேச்சுக்கிறதுக்கு எண்ணையும் இருக்க. நீங்க காபி குடிச்சிட்டு, சீக்கிரம் கங்கா ஸ்நானம் பண்ணிட்டு வந்துடுங்க.

ஆதித்தன்: கங்கா ஸ்நானம் பண்ணணும்னா, நான் காசிக்கில்ல போகணும்.

ஆராதனா: சும்மா விளையாடாதீங்க. சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க. அப்பா துணிமணி குடுப்பாங்க. அதை போட்டுக்குங்க. 


ஆதித்தன்: ஆமா மோதிரத்தை பத்தி நீ ஒண்ணுமே சொல்லலை. உங்கப்பா வேற ,மோதிரத்துக்கு அளவு எடுக்கலை. உம். கொஞ்சம் பெருசா தானே மோதிரம் செஞ்சிருக்காங்க. சின்னதா பண்ணியிருந்தா இந்த விரலுக்குள்ள போகாது.(பிளாஸ்திரி போட்டா விரலை பார்த்துக்கொள்கிறான் ).

ஆராதனா: (தரையைப் பார்த்து, கட்டை விரலால கோலம் போட்டுக்கொண்டு), ஏங்க நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?


ஆதித்தன்: என்னது! பீடிகை, பலமா இருக்கு. மோதிரத்தை சின்னதா செஞ்சுட்டாங்களா?பரவாயில்லை, நான் சுண்டு விரல்ல போட்டுக்குறேன்.

ஆராதனா:(மெல்லமாக இந்த மனுஷன் மோதிரத்தை விட்டு வெளியே வர மாட்டேங்குறாரே). இல்ல, இல்ல, அப்பா இந்த வருஷம் மோதிரம் போடலையாம், அடுத்த வருஷம் போடுறாங்களாம். 


ஆதித்தன்: (சத்தமாக) என்னது! மோதிரம் இல்லையா. அப்புறம் எதுக்கு என்னைய தலை தீபாவளிக்கு வாங்கன்னு கூப்பிட்டீங்களாம்?

ஆராதனா: மெல்லாமா பேசுங்க, அம்மா, அப்பா காதுல விழுந்துட போகுது.


ஆதித்தன்: (இன்னும் சத்தமாக), நல்லா விழட்டும். இதப் பாரு, மோதிரம் போட்டா, நான் இங்க இருக்கேன். இல்லையா, இதோ இப்பவே நான் கிளம்புறேன். உங்க அப்பா அம்மாக்கிட்ட போய் சொல்லு.

(அதற்குள் சத்தம் கேட்டு, ஈஸ்வரனும், பார்வதியும் வருகிறார்கள்)


ஆராதனா: ஏம்பா, ஒரு மோதிரத்தை செஞ்சிருந்தீங்கன்னா, இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதில்லை.

ஈஸ்வரன்: மாப்பிள்ளை, கொஞ்சம் பொருத்துக்குங்க. நான் அடுத்த வருஷம் பெரிய மோதிரமா செஞ்சு குடுக்கிறேன். 


(ஆதித்தன் உம்மென்று இருக்கிறான்).

பார்வதி: (ஈஸ்வரனிடம்), ஏங்க, இந்த மோதிரத்தை மாப்பிள்ளைக்கு கொடுங்க. (மோதிரத்தை கழட்டி கொடுக்கிறாள். ஈஸ்வரனோ அதை வாங்காமல் நிற்கிறார்) 


ஆதித்தன்: (ஆராதானவை பார்த்து), அந்த மோதிரத்தை எனக்கு தர்மம் பண்ணி, என்னைய அசிங்கப் படுத்துறீங்களா? இது சரி வராது. நான் இப்பவே கிளம்புறேன்.

ஈஸ்வரன்: (பார்வதியிடம்)நீ மடத்தனமா செஞ்சு, மாப்பிள்ளையோட கோபத்தை இன்னமும் அதிகமாக்கிட்ட. மாப்பிள்ளை, அடுத்த வருஷம் கண்டிப்பா மோதிரம் போடுறேன். 


ஆராதனா: ஏங்க, எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிங்குளேன். பிளீஸ்.

ஆதித்தன்: (ஆராதானவை பார்த்து), உன் முகத்துக்காக, நான் பொருத்துக்குறேன். ஆனா,உங்கப்பா கொடுக்குற புது துணியை எல்லாம் போட்டுக்க மாட்டேன். சரி, நான் குளிச்சுட்டு வரேன்.


ஈஸ்வரன்: மாப்பிள்ளை, நீங்க இவ்வவளவு தூரம் இறங்கி வந்ததே போதும்.

(எல்லோரும் போகிறார்கள்)


(ஆதித்தன் உட்கார்ந்திருக்கிறான். அப்போது ஆராதனா தட்டில் பலகாரங்களோடு வருகிறாள்)
ஆராதனா: இந்தாங்க, எங்க அம்மா செஞ்ச பலகாரம். 

ஆதித்தன்: ஆ! வாசனை மூக்கைத் துளைக்குதே. கொடு, கொடு.

(எல்லாத்தையும் நல்லா சாப்பிடுகிறான். அப்போது பார்வதியும்,ஈஸ்வரனும் வருகிறார்கள்)


ஆதித்தன்: இந்த மைசூர்பாகும்,லட்டும் இன்னும் கொஞ்சம் வை.

(உடனே, பார்வதி வேக வேகமா ஓடி, ஆராதனாவிடம் கொடுக்கிறாள்). 


ஆராதனா: (அவன் தட்டில் வைத்துக் கொண்டே, ஆமா, அப்படி கோபம் வந்துச்சு, இப்ப என்னடான்னா, வெளுத்துக் கட்டுறீங்க?

ஆதித்தன்: சண்டை வேற, சாப்பாடு வேற. உங்கம்மா செஞ்ச பலகாரம் எல்லாம், எங்கம்மா செஞ்ச மாதிரியே ரொம்ப நல்லா இருக்கு. நாம திரும்பி ஊருக்கு போறதுக்குள்ள, இதெல்லாம் உங்கம்மாக்கிட்டேருந்து கத்துக்கோ. 


ஆராதனா: சரிங்க. (அம்மாவிடம் கிட்ட போய்) பாரும்மா, இப்படி சாப்பிடுவாரு, ஆனா உடம்பு மட்டும் வராது. பார்க்கிறவங்களுக்கு, நான் என்னமோ ஒழுங்கா சமைச்சு போடாத மாதிரி தோணும்.

(பார்வதி, ஈஸ்வரனை பார்த்து, நக்கலாக சிரிக்கிறாள். அதற்குள் ஆதித்தனும் சாப்பிட்டு எந்திரிக்கிறான்). 


ஆதித்தன்:(ஆராதனாவிடம்), சரி நான் போய் ரெஸ்ட் எடுத்துக்கிறேன், நாளைக்கு ஒரு மணிக்கு நமக்கு train இருக்கு. நியாபகம் இருக்கட்டும்.

பார்வதி: என்னடி, நாளைக்கே கிளம்பனுமா?


ஆராதனா: ஆமாம்மா, அவருக்கு ஆபிஸ்ல லீவு கிடையாதும்மா.

(எல்லோரும் போகிறார்கள்).


(22 வருடம் கழித்து)

காட்சி – 4:

இடம் - (சென்னை– ஆதித்தன் வீடு)

கதாப்பத்திரங்கள் – ஆதித்தன், ஆராதனா, முகிலன், கயல்விழி, ஈஸ்வரன், பார்வதி மற்றும் கபிலன்)


(ஆராதனா அங்கும் இங்கும் போய் கொண்டும், வந்துக் கொண்டும் இருக்கிறாள்.)

ஆதித்தன்: ஆமா, என்ன கால்ல, சக்கரத்தை கட்டிக்கிட்டு திரிஞ்சுக்கிட்டு இருக்கிற?நாளைக்கு தானே தீபாவளி. என்னமோ இன்னைக்கு தான் தீபாவளி மாதிரி திரியிற?



ஆராதனா: நம்ம பொண்ணும், மாப்பிள்ளையும் தலை தீபாவளிக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வராங்க. நான் எல்லாம் செஞ்சு வைக்க வேண்டாமா? ஆமா நீங்க இன்னும் ஏர்போர்ட் போகலையா?

ஆதித்தன்: ஃப்ளைட் 11மணிக்கு தான் லாண்ட் ஆகுது. அவுங்க வெளியே வரதுக்கு எப்படியும் 12வது ஆயிடும். மணி இப்ப 11.30 தான் ஆகுது. நான் கார் எடுத்துக்கிட்டு இப்ப போறேன். சரியா இருக்கும். 



(அப்போது முகிலனும், கயல்விழியும் வருகிறார்கள்)



ஆதித்தனும், ஆராதனாவும்: வாங்க வாங்க. நீங்களே வந்துட்டீங்க?

முகிலன்: Flight one hour earlierஆ லாண்ட் ஆயிடுச்சு. அதான் நாங்களே கால் டாக்ஸி எடுத்து வந்துட்டோம். 


ஆதித்தன்: மாப்பிள்ளை, விமானப் பிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்துச்சா?

முகிலன்: எல்லாம் நல்லா இருந்துச்சு அங்கிள். ஆமா, நீங்க எப்படி இருக்கீங்க? அத்தை நீங்க எப்படி இருக்கீங்க?


ஆராதனா: புடவையை இழுத்துப் போர்த்திக்கிட்டு, (மெல்லமாக) நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை.

முகிலன்: அட, எதுக்கு இப்படி கூச்சப்படுறீங்க. நானும் உங்களுக்கு ஒரு மகன் தான். அதனால தான் மாபிள்ளையை மருமகன்ன்னு சொல்றோம். 


ஆதித்தன்: அட! அட! பார்த்தியா என் மாப்பிள்ளையை, என்ன அருமையா மருமகனுக்கு விளக்கம் கொடுக்கிறதை. சரிம்மா, கயல்விழி, மாப்பிள்ளையும், நீயும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு, குளிச்சுட்டு வாங்க. எல்லோரும் சாப்பிடலாம்.

முகிலன்: நோ அங்கிள். இப்ப ரெஸ்ட் எடுத்தா, jetlog அதிகமாயிடும். அதனால நாங்க குளிச்சிடுறோம். கயல், முதல்ல நீ குளிக்கிறியா, இல்ல நான் குளிக்கட்டுமா?


கயல்விழி: நீங்களே, முதல்ல குளிச்சிட்டு வாங்க.

(முகிலன் போகிறான்)


ஆராதனா: என்னமா கயல், ஆஸ்திரேலியா எல்லாம் எப்படி இருக்கு.

ஆதித்தன்: ஏம்மா, நீங்க இருக்கிற இடத்துல நம்ம தமிழ் ஆளுங்க எல்லாம் இருக்காங்களா?


கயல்விழி: ஆஸ்திரேலியா ரொம்ப சூப்பர்ரா இருக்கு. நாங்க சிட்னில இருக்கோம். அங்க நம்ம ஊர்க்காரங்க நிறைய பேர் இருக்காங்க. எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே தமிழ் பேசுறவங்க இருக்காங்க. அப்புறம் தமிழ் ஸ்கூல் வேற இருக்கு. போன வாரம் தான் நான் அதுல டீச்சரா சேர்ந்திருக்கேன். அதான் உங்களுக்கு போன்ல சொல்ல முடியலை. 



ஆதித்தன்: நீ தமிழ் வேற சொல்லிக்கொடுக்கிறியா! பலே! பலே! சரிம்மா, மாப்பிள்ளை உன்னைய எப்படி பார்த்துகிறாரு?

கயல்விழி: அவர் ரொம்ப நல்ல டைப்பா. எதுக்குமே கோபப் படமாட்டாரு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். 


ஆதித்தன்: இதை கேக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்புறம் நாளைக்கு மாப்பிள்ளைக்கு கொடுக்கிறதுக்கு, வைர மோதிரம் செஞ்சு வச்சிருக்கேன். போட்டு பார்க்கட்டும். பெருசா இருந்தா நூல் சுத்தி போட்டுக்கட்டும்.

ஆராதனா: என்னது, வைர மோதிரமா. என்கிட்ட கூட சொல்லவே இல்ல. 


ஆதித்தன்:உண்கிட்ட சொன்னா? நீ உடனே உங்கப்பாம்மாக்கிட்டே சொல்லுவ. எனக்கு அது பிடிக்கலை. அதனால தான் உன்கிட்ட சொல்லலை.

ஆராதனா: ஏங்க, இன்னமுமா உங்களுக்கு அந்த கோபம் தீரலை. 


கயல்விழி: என்ன கோபம்மா?

ஆராதனா: அது ஒண்ணும் இல்லடா, எல்லாம் பழைய கதை. 


கயல்விழி: ஏம்பா, மாப்பிள்ளைக்கு மட்டும் தான் மோதிரமா? எனக்கில்லையா?

ஆதித்தன்: உனக்கு தான் கல்யாணத்தன்னைக்கே நிறைய கொடுத்தாச்சே. அதுவும் இல்லாம,மாப்பிள்ளைக்கு தலைதீபாவளி அன்னைக்கு மோதிரம் போடுறது ஒரு சம்பிரதாயம்மா. 


கயல்விழி: நான் சும்மா தான்பா கேட்டேன். சரி, அவர் குளிச்சுட்டு வந்துட்டாருன்னு நினைக்கிறேன். நான் போய் குளிக்கிறேன்.

(எல்லோரும் போகிறார்கள். மறு நாள் காலை)


ஆதித்தன்: கயல்விழி,அம்மாக்கிட்ட காப்பி வாங்கிக்கிட்டு, மாப்பிளையை போய் எழுப்பும்மா. அப்புறம் அவர் கங்கா ஸ்நானம் வேற பண்ணனும். நேரம் ஆகுது பாரு.

(அப்போது முகிலன், குளித்து விட்டு துண்டை தோளில் போட்டுக்கொண்டு வருகிறான்)


ஆதித்தன்: அடடா! மாப்பிள்ளை அதுக்குள்ள கங்கா ஸ்நானம் பண்ணிட்டிங்கீளா?

முகிலன்: ஆச்சு அங்கிள். 


ஆதித்தன்: ஆராதனா, கயல்விழி எல்லோரும் வாங்க. வரும்போது, மாப்பிள்ளைக்கு கொடுக்கிறதுக்காக நான் தனியா எடுத்து வச்சிருந்ததை எடுத்துக்கிட்டு வாங்க.

(ஆராதனா, அந்த டிரஸ்ஸை ஆதித்தனிடம் கொடுக்கிறாள்)


ஆதித்தன்: இந்தாங்க மாப்பிள்ளை, தலை தீபாவளிக்காக நாங்க உங்களுக்கு செய்ய வேண்டிய சீர்.

முகிலன்: இந்த formalities எல்லாம் எதுக்கு அங்கிள். சரி, பெரியவங்க நீங்க ஆசைப்பட்டு செய்யுறீங்க, நான் வாங்கிக்கிறேன். அதே மாதிரி நான் சொல்றதை இப்ப நீங்க கேக்கணும். கயல் நாம முடிவு எடுத்ததை சொல்லு. 


(அப்போது ஆராதனாவும், ஆதித்தனும் ஒண்ணும் புரியாமல் தங்களுக்குள் பார்த்துக் கொள்கிறார்கள்)

ஆதித்தன்: (பயந்துக்கொண்டே) என்னம்மா, முடிவு கிடிவுன்னு என்னமோ சொல்றீங்க. எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு. 


கயல்விழி: அப்பா, எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுறீங்க? ஒண்ணும் பயப்பிட வேண்டாம். இந்த தலைதீபாவளியை நாம எல்லோருமா சேர்ந்து ஒரு அநாதை ஆசிரமத்தில போய் கொண்டாடலாம்னு முடிவு எடுத்திருந்தோம். அதை தான் அவர் சொல்றாரு.

ஆதித்தன்: அப்பாடி, இவ்வளவு தானா, நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்து போயிட்டேன். இது ரொம்ப நல்லா விஷயமா இருக்கே. (முகிலனையே பார்க்கிறார்)


முகிலன்: என்ன அங்கிள், என்னையே பார்க்கிறீங்க?

ஆதித்தன்: இல்ல, என்னோட தலைதீபாவளில இந்த மாதிரி எல்லாம் எனக்கு ஏன் தோனலைன்னு யோசிக்கிறேன். 


ஆராதனா: உக்கும். அப்ப உங்களுக்கு, எங்கப்பா தலையை எப்படி மொட்டை அடிக்கலாம்னு இல்ல யோசிச்சீங்க. 



ஆதித்தன்: சரி, சரி, அந்த பழைய கதை எல்லாம் பேசாம நீ சும்மா இரு. ஆமாம், எந்த அநாதை ஆசிரமத்துக்கு நாம போறோம்?

கயல்விழி: தாம்பரத்தில “சிவானந்தா சரஸ்வதி சேவாஷ்ரம்” இருக்குதில்ல. அங்க தான் போய் கொண்டாடலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இந்தியா வரதுக்கு முன்னாடியே, அந்த ஆஸ்ரமத்தோட பேசிட்டோம். 


ஆதித்தன்: நீங்க பேசுறதை கேக்கும்போது, ரொம்ப சந்தோஷமா இருக்குதும்மா. கண்டிப்பா நாம அங்கேயே உங்களோட தலைதீபாவளியை கொண்டாடுவோம்.
நன்றி வணக்கம்
காணொளி: