Tuesday, December 24, 2013

பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ் தேர்வில் அதி உயர் புள்ளியைப் பெற்று தேர்ச்சிப் பெற்ற மாணவி

இந்த ஆண்டில் நடந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தமிழ் பாடத்தில் அதி உயர் புள்ளியைப் பெற்று(Band 6) Minster for Education Adrian Piccoli யிடமிருந்து விருதினைப் பெற்ற பெருமையை பெற்றிருக்கிறார் செல்வி மாதுமை கோணேஸ்வரன். இவருக்கு வலைப்பூ வாசகர்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 


நன்றி: தமிழ்முரசு ஆஸ்திரேலியா
 
ஆஸ்திரேலியாவில் நியு சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தென்ஆஸ்திரேலியா மாநிலங்களில் பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழை இரண்டு யூனிட்டுகளாக (2 units)  எடுத்துப்படிக்க அனுமதி உள்ளது. அவர்கள் இரண்டு தேர்வுகள் செய்ய வேண்டும். அதில் ஒரு  தேர்வில்,  மாணவர்கள் “தனி மனிதன், மாறி வரும் உலகம் மற்றும் தமிழ் பேசும் சமூகங்கள்” என மூன்று கருப் பொருள்களில்  ஏதேனும் ஒன்றில் ஒரு வருடத்திற்கு ஆய்வு செய்ய வேண்டும்.  மாணவர்கள் தாங்கள் ஆய்வு செய்ததைப் பற்றி தேர்வாளரோடு(examiner) 8 நிமிடங்களுக்கு விவாதிக்க (Discussion) வேண்டும். அடுத்து,  ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு திறன்களில் ஒன்றான பேசுதல்(Speaking) தேர்வில், மாணவர்களிடம் தேர்வாளர் பாடத்திட்டத்துக்குட்பட்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கேள்விகளை கேட்பார். அதற்கு மாணவர்கள்  தமிழிலேயே உரையாட(Conversation) வேண்டும். இந்த உரையாடல் 7 நிமிடங்கள் வரை நீடிக்கும். இந்த வகை தேர்வு வாய்மொழித் தேர்வாகும் (Oral Exam).  

மற்றொரு தேர்வானது, ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு திறன்களில் மற்ற மூன்று திறன்களான உற்றுக்கேட்டலும் பதிலளித்தலும் (Listening and Responding), வாசித்தலும் பதிலளித்தலும்(Reading and Responding) மற்றும் எழுதுதல் (writing) ஆகியவற்றில் மாணவர்கள் எவ்வாறு பயின்றிருக்கிறார்கள் என்பதை மதிப்பீடு செய்வதாகும். இந்த தேர்வு எழுத்துத் தேர்வாகும் (Written Exam).

இந்த எழுத்துத் தேர்வானது “TOEFL”,”IELTS”,”JLPT” போன்ற தேர்வுகளை மாதிரி வடிவைமக்கப்பட்டிருக்கும். இந்த நான்கு திறன்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலே, ஆஸ்திரேலியாவில் மொழிப் பெயர்ப்பாளருக்கான தேர்வில் எளிதில் வெற்றி பெற்று மொழிப்பெயர்ப்பாளராக ஆக முடியும்.

இதைத்தான் நான் “புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் கல்வி” என்னும் தலைப்பில் மலேஷியாவில் நடந்த 10வது உலக தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டுக்கு கட்டுரையை சமர்பித்திருந்தேன்.


இங்கு எனக்கு தெரிந்து நிறைய இந்திய தமிழ் பிள்ளைகள் பன்னிரெண்டாம் வகுப்பு எழுதியிருக்கிறார்கள். ஆனால் தமிழை ஒரு பாடமாக எடுத்து எழுதியிருக்கிறார்களா என்றால் இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் நம் இந்திய தமிழ் குழந்தைகள் தமிழை எடுத்து படிக்கிறார்கள். அவர்களை குறை கூற முடியாது. பெற்றோர்கள் தான், அவர்கள் தமிழை எடுத்து படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். ஆனால் நிறைய பெற்றோர் அதை செய்வது கிடையாது. ”என் பையன் தமிழை படிச்சு என்ன செய்யப் போறான், அவனுக்கு எழுதப் படிக்க தெரிஞ்சிருந்தா போதும்னு.” என்னிடம் நிறைய பெற்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஒரு வசதி என்னவென்றால், 10ஆம் வகுப்பு அல்லது 11ஆம் வகுப்பு படிக்கும்போதே, தமிழுக்கான இரண்டு யூனிட்களை படித்து 12ஆம் வகுப்பிற்கான தமிழ் தேர்வை எழுதிட முடியும். பிறகு அவர்கள் 12ஆம் வகுப்பில் மற்ற பாடங்களை மட்டும் படித்தால் போதும். இந்த வசதி இருந்தும் தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழை படிக்க ஊக்குவிப்பதில்லை. அப்படியே, அவர்கள் ஊக்குவித்தாலும், பிள்ளைகள் தமிழைப் படிக்காமல் இருப்பதற்கு ஏதாவது காரணங்களை சொல்லி பெற்றோர்களை திசைத் திருப்பி விடுகிறார்கள்.
 
தமிழ்நாட்டிலேயே, “எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது” என்று சொல்வது தான் இப்போது நாகரீகமாகி விட்டது. வேற்று மொழியை கற்றுக்கொள்வதற்காக, நம் தாய் மொழியை புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம்???

 

6 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  2. செல்வி மாதுமை கோணேஸ்வரன் நமது பாராட்டுக்குரியவர். அவரது பெற்றோரும் தான்! நீங்கள் சொல்வதுபோல் பெற்றோர் மனது வைத்தாலன்றிப் பிள்ளைகள் தமிழ் படிக்கப்போவதில்லை. தமிழ்நாட்டிலேயே பல பெற்றோர்கள் தமிழைப்பற்றிக் கவலைப்படுவதில்லை என்னும்போது, எதிர்காலத்தில் தமிழைக் காக்கப் போகின்றவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களே என்று தெரிகிறது. சரியான சமயத்தில் எழுதப்பட்ட, விழிதிறக்கும் கட்டுரை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
      "//எதிர்காலத்தில் தமிழைக் காக்கப் போகின்றவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களே என்று தெரிகிறது//" - நீங்கள் சொல்வது சரி தான். ஏனென்றால், இங்கு நடைபெறும் எந்த ஒரு தமிழ் நிகழ்வுக்கும் அவர்களின் ஆதரவு தான் அதிகமாக இருக்கிறது. மேலும் அவர்களின் ஆதரவினால் தான் வானொலி நிலையங்களும் இயங்குகின்றன.

      Delete
  3. செல்வி மாதுமை கோணேஸ்வரன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete