Monday, September 30, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி – தொடர்ச்சி


நானும் இன்னொரு நண்பரும் இப்ப சாப்பிடலாமா வேண்டாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது, கிருஷ்ணா எங்களை ஷாட் ரெடி வாங்கன்னு கூப்பிட்டாரு. நாங்க அந்த சின்ன அறைக்குள்ள போனோம். அங்க டேபிள் சேர் எல்லாம் அரேஞ்ச் பண்ணி வச்சிருந்தாங்க. ஐந்து ஐந்து பேர் எதிர்,எதிர்ல வரிசையா உட்கார்ந்தோம். அதுல நான் ஒரு வரிசையில முத ஆளா உட்கார்ந்தேன். எங்களோட வலது பக்கத்துல அதே மாதிரி ஒரு எட்டு பேர் எதிர் எதிர்ல உட்காருக்கிற மாதிரி டேபிள் சேர் போட்டு இருந்தாங்க. அதுல இந்த படத்துல நடிக்கிற டான்சர் பாய்ஸ் உட்கார்ந்திருந்தாங்க. அதுல ஓரத்துல ஒரு சீட்டுல அஸோசியேட் டைரக்டர் பிரசன்னாவும் அவருக்கு பக்கத்துல சந்தானமும் உட்கார்ந்திருந்தாங்க. சரி, இணை இயக்குனரும் நடிக்கிறார் போலன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீரவ்ஷா வந்து காமிராவை அந்த அறையோட கதவு கிட்ட வச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தாரு. அதாவது அவர் எங்களோட இடது பக்கத்திலிருந்து ஷுட் பண்றதுக்கு ரெடியா இருந்தாரு. எங்கடா, அமலாபாலை காணோம்னு பார்த்தா, அவருக்கு அவரோட மேக்கப் மேன் மேக்கப் போட்டுக்கிட்டு இருந்தாரு(ரொம்ப பெருசா எல்லாம் இல்லை, சும்மா முகத்துல பவுடரை அப்பிக்கிட்டு இருந்தாரு. போதாக்குறைக்கு கண்ணாடியை வேற எடுத்து காமிச்சு, இன்னும் பவுடர் போடட்டுமான்னு கேட்டுக்கிட்டு இருந்தாரு). அமலாபாலுக்கு பின்னாடி அவருடைய உதவியாளர் இன்னொரு பொண்ணு சரியா இருந்த அவுங்க தலை முடியை,சுருக்கி விட்டுக்கிட்டு  இருந்தாங்க. இந்த களேபரத்துக்கு நடுவுல இயக்குனர் விஜய் எங்க கிட்ட அந்த காட்சியை விளக்க ஆரம்பிச்சாரு. அதாவது நடிகர் சசுரேஷும் அவரோட மகள் அமலாபாலும் இந்த ஹோட்டலை நடத்துறாங்க. அமலாபாலோட ஹோட்டல்னு தெரிஞ்சு, நீங்க எல்லோரும் அவரை பார்க்கிறதுக்காக இந்த ஹோட்டலுக்கு சாப்பிட வறீங்க. அப்ப சந்தானமும் உங்களுக்கு போட்டியா இங்க சாப்பிட வருவாரு. உங்களுக்கு இங்க இருக்கிற சாப்பாடு பற்றி ஒண்ணும் தெரியாது . அதனால சிவப்பு கலரை கொண்டுவாங்க, பச்சை கலரை கொண்டுவாங்க,மஞ்சக்கலரை கொண்டுவாங்க அப்படின்னு நீங்க பாட்டுக்கு கத்திக்கிட்டே இருப்பீங்க. அமலாபால் உங்களுக்கு பரிமாறுவாங்க. அவுங்களை வேற யாருக்கும் கவனிக்க விடாம நீங்க அவுங்களை கூப்பிட்டுக்கிட்டே இருக்கணும். அவுங்களை குறிப்பா சந்தானம் பக்கம் போய் பரிமாற விடக்கூடாது, அப்படின்னு எங்களுக்கு காட்சியை சொல்லி முடிச்சு, சரி நாம ஒரு ரிகர்சல் பார்த்துடலாம்னு சொன்னாரு. இதுல, கலர் கலரா சாதம் என்னன்னா, “தக்காளி சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம்,கொண்டகடலை குருமா இந்த மாதிரி”. இந்த சாதம் வகைகள் எல்லாம் இந்த உணவகத்துல செய்ய மாட்டாங்க (இந்த உணவகம் ஒரு வடக்கத்திய உணவகம்), அதனால முதல் நாள் இரவு 10 மணிக்கு, வேறு ஒரு நண்பருக்கு இந்த படக்குழுவினர் போன் பண்ணி, நாளைக்கு காலைல 9 மணிக்கு எல்லாம் இத்தனை வகையிலும் கொஞ்சம், கொஞ்சம் செஞ்சு எடுத்துக்கிட்டு வந்துடுங்கன்னு சொல்லியிருக்காங்க. அந்த நண்பரோட மனைவியும் காலைல எந்திரிச்சு இத்தனை வகைகளையும் செஞ்சு எடுத்துக்கிட்டு வந்திருக்காங்க.
ரிகர்சல்ல முதல்ல என்னைய இயக்குனர், நீங்க “சிகப்பு கலர்” கொண்டுவாங்கன்னு சொல்லுங்கன்னு சொன்னாரு, அப்புறம் ஒருத்தரை மஞ்ச கலர்”, இன்னொருத்தரை “பச்சை கலர்”ன்னு வரிசையா சொல்ல சொன்னாரு. அப்புறம் அமலாபாலிடம், “அம்லா” ரெடியான்னு கேட்டாரு. அவுங்களும் நான் ரெடின்னு சொன்னாங்க. நீரவ்ஷாவிடம், “நீரவ், நாம ஒரு ரிகர்சல் பார்த்துடலாம்னு சொல்லி, நான் ஆக்ஷன் சொன்னவுடனே, நீங்க கத்த ஆரம்பிச்சிடணும்னு சொன்னாரு. நாங்களும் அதே மாதிரி கத்தினோம். அமலாபால் முதல்ல எனக்கு எதிர்ல இருக்கிற நண்பருக்கு பரிமாறுவாங்க, அப்புறம் வேற ஒருத்தருக்கு பரிமாறுவாங்க, அப்புறம் எனக்கு பரிமாறுவாங்க அவ்வளவுதான். இந்த காட்சியையே ஒரு 4/5 தடவை ரிகர்சல் பார்த்தோம். அப்புறம் என்ன நினைச்சாங்களோ தெரியலை, இயக்குனர் அந்த அறைக்குள்ள இருந்தவங்க எல்லாரையும் பார்த்து, நீங்க போய் சாப்பிட்டு சீக்கிரம் வந்துடுங்கன்னு சொல்லி லஞ்ச் பிரேக் விட்டாரு. உதவி இயக்குனர்கள், அப்புறம் அந்த டான்ஸ் பாய்ஸ் எல்லாரும் சாப்பிட போயிட்டாங்க. எங்களுக்கு ஒரே குழப்பம், நாமளும் போய் சாப்பிடலாமான்னு. ஒரு வழியா சரி, நாமளும் போய் பார்க்கலாம்னு முடிவு பண்ணி நாங்களும் அந்த சாப்பாட்டு அறைக்குள்ள போனோம். இன்னொரு பெரிய அறைல எல்லோரும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் அந்த வரிசைல போய் நின்னு பேப்பர் தட்டுல சாப்பாட்டை எடுத்துக்கிட்டு போய் சாப்பிட்டோம். ஆனால் சும்மா சொல்லக்கூடாது, சாப்பாடு ரொம்ப அருமையா இருந்துச்சு. இந்த கேட்டரிங் வந்து நண்பரோட நண்பர் தான் எடுத்து பண்றாரு. காலையிலும் மதியமும் சைவ சாப்பாடு. அதை அவர் பண்ணிக்கொடுக்கிறதாகவும்.  இரவு அஞ்சப்பர்லேருந்து அசைவ சாப்பாடுன்னு சொன்னாங்க. பரவ்வாயில்லை, எங்களுக்கும் சாப்பாடு கொடுத்துட்டாங்க. நாங்களும் நல்லா திருப்தியா சாப்பிட்டோம். படக்குழுவினரோடு நின்னு சாப்பிட்டது ஒரு வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு. இயக்குனர், அமலாபால், சந்தானம், நீரவ்ஷா இவுங்க எல்லோரும் காட்சி எடுக்கிற அறையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டாங்க. நாங்க சாப்பிட்டு முடிச்சு மறுபடியும் எங்களோட சூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள போனோம். நான் போறதுக்குள்ள, எங்க கூட்டத்திலிருந்த வேற ஒருத்தர், என் இடத்துல போய் உட்கார்ந்துக்கிட்டாரு. ஏற்கனவே, அந்த ரோஸ் கொடுக்கிற காட்சியில, என் பக்கத்துல நின்னவரு, அவர் நிக்க வேண்டிய இடத்துல நிக்காம என்னைய தள்ளிக்கிட்டு நிப்பாரு. அதையுமே இயக்குனர் ஒரு ரெண்டு மூணு தடவை அவரிடம் ரொம்ப தள்ளிக்கிட்டு வந்து நிக்காதீங்கன்னு சொல்லி சொல்லி அலுத்துப்போனாரு. இப்ப, இங்க இன்னொருத்தர் என் சீட்டுல வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்காரு.  எனக்கு என்ன பண்றதுன்னே ஒண்ணும் புரியலை. ஆஹா, நம்ம மக்களுக்கு தான் என்ன ஒரு பேராசைன்னு நினைச்சுக்கிட்டு நின்னேன். அதுக்குள்ள கிருஷ்ணா அவரிடம் வந்து, சார், நீங்க உங்க இடத்துல போய் உட்காருங்கன்னு சொன்னாரு. அதற்கப்புறம் தான் அந்த மனிதர் எந்திரிச்சு போய் அவரோட இடத்துல உட்கார்ந்தாரு. எங்களுக்கு மின்னடி இருக்கிற தட்டுல, எல்லா சாதமும் இருக்கும், ஆனா எடுத்து சாப்பிடக் கூடாது, சாப்பிட மாதிரி நடிக்கணும்னு சொன்னாரு இயக்குனர். நாங்களும் மறுபடியும் கத்துறதுக்கு ரெடியா இருந்தோம். அப்பத்தான் எங்க அறைக்குள்ள,அதாவது சூட்டிங் ஸ்பாட்டுக்குள்ள விஜய் வந்தாரு.

தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி – விஜய்யை நாங்கள் காக்க வைத்தது

-    இன்னும் சொல்கிறேன்


Wednesday, September 25, 2013

தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி


நீங்க யாரும் போயிடாதீங்க, இன்னும் ஒரு காட்சி ரெஸ்டாரண்ட் உள்ளுக்குள்ள எடுக்கணும், அதனால போய் காஸ்ட்யூம் மாத்திக்கிட்டு வாங்கன்னு இயக்குனர் சொன்னாரு. நாங்களும் மறுபடியும் அந்தக் உணவகத்துக்குள்ள போய் எங்க துணிப்பெட்டியை திறந்து வேற பாண்ட், சட்டை எல்லாம் எடுத்துக்கிட்டு பல்லவி அக்கா கிட்ட வந்து (அதாங்க, காஸ்ட்யூம் டிசைனர் கிட்ட ), இந்த டிரஸ் நல்லாயிருக்குமா,அந்த டிரஸ் நல்லாயிருக்குமான்னு கேக்க ஆரம்பிச்சோம். அவுங்களும் நீங்க பாண்ட் மாத்த வேண்டாம், வெறும் சட்டையை மட்டும் மாத்திக்குங்கன்னு சொன்னதுனால, எல்லோரும் வேற  சட்டையை மாத்திக்கிட்டோம். இன்னொரு நண்பர் ஒருத்தர் சட்டையை மாத்திக்காம இருந்தாரு. நீங்க மட்டும் ஏங்க இன்னமும் மாத்திக்காம இருக்கீங்கன்னு கேட்டேன்,அதுக்கு அவரு நான் கொண்டு வந்த டிரஸ் எல்லாம் என்னோட கார்ல தான் இருக்கு,ஆனா காரு தான் இப்ப என்கிட்ட இல்லைன்னாரு. காரு எங்க போச்சுன்னு கேட்டா, அமலா பால் மேக்கப் பண்ணிக்கிறதுக்காக என் கார்ல தான் போயிருக்காங்க. அவுங்க வந்தா தான் நான் வேற டிரஸ் மாத்திக்க முடியும்னு சோகமா முகத்தை வச்சுக்கிட்டு சொன்னாரு. சரி தான், சும்மாவே பொண்ணுங்க மேக்கப் பண்ணிக்கிறதுக்கு ரொம்ப நேரம் எடுத்துப்பாங்க. இதுல இவுங்க கதாநாயகி வேற, கேக்கவே வேணாம்னு மனசுல நினைச்சுக்கிட்டேன். அப்ப என் பக்கத்துல நின்ன இன்னொருத்தர் அவரிடம், ஏங்க அமலா பால் உங்க கார்ல போயிருக்காங்கன்ன, உங்க கார் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்கு போல அப்படின்னு சொல்லி, நீங்க அமலாபாலை பார்த்தீங்களான்னு கேட்டாரு. ஏற்கனவே நம்ம நண்பருக்கு வேற டிரஸ் மாத்த முடியலையேன்னு கடுப்பு, இதுல இன்னொருத்தர் அமலா பாலை நீங்க பார்த்தீங்களான்னு கேட்டவுடனே கோபம் வந்துடுச்சு. அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்களும் பார்க்க தானே போறீங்க, அதுக்குள்ள என்ன அவசரம்னு கேட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து போயிட்டாரு. ஆனா ரொம்ப நேரம் நம்ம நண்பரை காக்க வைக்காம, அமலாபால் சீக்கிரம் மேக்கப் போட்டுக்கிட்டு வந்துட்டாங்க. நாங்க எல்லோரும் ரெடியா காத்துக்கிட்டு இருந்தோம். அவுங்க கூப்பிடுற மாதிரி தெரியலை. அப்பத்தான் நாங்க ஜூஸ் கேட்டு, தண்ணி மட்டும் இருக்குது குடிக்கிறீங்களான்னு கேட்டது நடந்தது.


அந்த உணவகம் கொஞ்சம் பெரிய உணவகம். வெளியிலிருந்து உள்ள போனா, இடது பக்கத்துல பெரிய உணவுக்கூடம் இருக்கும்,அந்த உணவுக்கூடத்தோட இன்னொரு மூலையில, பார்ட்டி நடப்பதற்காக ஒரு பெரிய அறை இருக்கும். அந்தக் அறையில தான் நாங்க போய் டிரஸ் எல்லாம் மத்திக்கிட்டு இருப்போம். வலது பக்கத்துல இன்னொரு சின்ன அறை இருக்கும், அந்த அறைல தான் நாங்க சாப்பிடுகிற காட்சியை படம் பிடிக்கிறதுக்காக எல்லோரும் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. எங்களை யாரும் கூப்பிடாததுனால, நாங்களே அந்த அறைக்குள்ள போனோம். உடனே நம்ம கிருஷ்ணா (அதாங்க, உதவி இயக்குனர்) நாங்க செட்டை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கோம்,அதனால கூப்பிடும்போது வாங்கன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டாரு. நான் அந்த அறையை விட்டு வெளியே வந்தவுடனே வீட்டு அம்மணி, ஏங்க மணி ஒண்ணாயிடுச்சு, குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கணும், அதோட எனக்கும் பசிக்குதுன்னு சொன்னாங்க. கூடவே இன்னொரு நண்பரோட மனைவியும்,ஆமாங்க பசிக்குது நாங்க இந்த உணவகத்துலேயே சாப்பிட்டுக்கிறோம்னு  அவுங்க கணவனிடம் சொன்னாங்க. அவுங்க கணவரும், என்னிடம் நாமளும் பேசாம இப்பவே இவுங்களோட சாப்பிடுவோமான்னு கேட்டாரு. நானும் இருங்க, எப்படியும் நமக்கு படப்பிடிப்பு குழுவினர் சாப்பாடு கொடுப்பாங்கன்னு சொன்னேன். நண்பருக்கு நம்பிக்கை இல்லை. ஜூஸ் கேட்டதுக்கே, தண்ணி மட்டும் தான் இருக்குன்னு சொன்னவங்களா, நமக்கு சாப்பாடு கொடுக்கப்போறாங்கன்னு சந்தேகமா கேட்டாரு. நானும் உங்க சந்தேகத்தை தீர்த்துடலாம்னு சொல்லி, படப்பிடிப்பு குழுவினருக்கு விசா,மற்ற உதவிகள் எல்லாம் பண்றவர் கிட்ட போய் (அவரு தான் இந்த படத்துல நடிக்கிறதுக்கு ஆட்கள் வேணும்னு என் நண்பர் அனகன் பாபுவிடம் சொன்னவரு), எங்களுக்கு இங்க மதிய உணவு கொடுப்பாங்களான்னு கேட்டேன். அவர் உடனே, இந்த சினிமாக்காரங்க நேரம் எல்லாம் உங்களுக்கு ஒத்து வராது, அவுங்க கண்ட கண்ட நேரத்துல சாப்பிடறதுக்கு பிரேக் விடுவாங்க, அதனால நாளையிலிருந்து நீங்க சாப்பாட்டு மூட்டையை கட்டிக்கிட்டு வந்துடுங்கன்னு சொன்னாரு. நண்பரும், என்னைய ஒரு பார்வை பார்த்தாருங்க பாருங்க, ஏண்டா, உனக்கு அறிவில்லையா, இவனுங்க கிட்ட போய் சாப்பாட்டை பத்தி கேக்குறியேன்னு பார்வையாலையே கேட்டாரு. அட!கடவுளே, இந்த அளவுக்கா இவனுங்க கஞ்சப் பயலுங்கன்னு நினைச்சுக்கிட்டேன். நண்பரும், பேசாம வாங்க நாமளும் இந்தக் உணவகத்துலேயே ஏதாவது சாப்பிடலாம்னு மறுபடியும் கூப்பிட்டாரு. நான் அவரிடம்,நாம ஆர்டர் பண்ணி உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கும்போது, அவுங்க ஷூட் பண்றோம் வாங்கன்னு சொன்னா, நாம அப்படியே எந்திரிச்சு போகணும், அதனால அவுங்க லஞ்ச் பிரேக் விடும்போது சாப்பிட்டுக்கலாம்னு சொல்லி வாயை மூடலை, அதுக்குள்ள கிருஷ்ணா எங்களை ஷாட் ரெடி வாங்கன்னு கூப்பிட்டாரு.

அப்புறம் எப்ப லஞ்ச் பிரேக் விட்டாங்க, நாங்க எப்படி சாப்பிட்டோம்னு அடுத்த பதிவுல சொல்றேன்.
தலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட்சி – தொடர்ச்சி

-    இன்னும் சொல்கிறேன்


Tuesday, September 24, 2013

எட்டுதொகை நூல்கள்


எட்டுதொகை நூல்கள்

சிரஞ்சீவி மணிவாசகம், ஐந்தாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ்ப் பள்ளி, ஹோல்ஸ்வோர்தி
இந்த கட்டுரையில் நான் எட்டுதொகை நூல்கள் பற்றி விவரிக்கப்போகிறேன். இதில் எட்டுதொகை என்றால் என்ன, யார் இயற்றியது, எந்த காலகட்டத்தில் நடைபெற்றது, அதில் என்ன இருக்கிறது, அந்த கால சமுதாயத்திற்கு எவ்வாறு பயன்பட்டது, மற்றும் அதனால் எனக்கு என்ன பயன் என்பனவற்றை விரிவாக கீழே வரும் பத்திகளில் காண்போம்.
எட்டுதொகை அல்லது தொகை நூல்கள் என்பவை சங்க இலக்கியத்தில் பலராலும் பல காலகட்டங்களில் எழுதப்பட்டுப் பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டவை(1).  இவற்றில் பல பாடல்கள், அவற்றை எழுதியவரது பெயர் காணப்படவில்லை. அகத்தையும், புறத்தையும் பற்றி இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. தொழில், அளவு, பாட்டு, பொருள் ஆகியவற்றால் தொகுக்கப் பட்டதால் தொகை எனப் பெயர்பெற்றது.
எட்டுதொகை நூல்களைப் பாடிய புலவர்கள் ஏறத்தாழ ஐநூற்றவர்(2). இதில் பெண்பாற் புலவர்களும் அடக்கம், இவர்கள் பல ஊர்களில் வாழ்ந்தவர்கள். பல்வேறு காலத்தவர்கள். பல்வேறு பிரிவினர்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பவர். இக்காலதில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் என்ப்படும். இப் பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுதொகை என்ற இரு பெரும் பிரிவாகப் பிரிதள்ளனர். எட்டுதொகை நூல்களை பின்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐந்குறுநூறு
                                                 ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
                                                 கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
                                                 இத்திறத்த எட்டுத் தொகை.
இவெட்டுத் தொகை நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். அகப்பொருள் பற்றிய நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை மற்றும் அகநானூறு ஆகிய ஆறு நூல்களும். புறப்பொருள் பற்றிய நூல்கள்: பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய நூல்களும் மற்றும் பரிபாடல் ஆகும்.
இப்பாடல்களில் பெருநில வேந்தர்களின் வெற்றிச் சிறப்புகளையும், போர்த்திறமையையும் விவரித்துக் கூறும் பாக்கள் பல; போரைத் தடுத்து அறிவு புகட்டுவன சில; வள்ளல் தன்மையை பாராட்டுவன பல; வருமையின் கொடுமையினை வருணிப்பன சில; மானமுடன் வாழ வழிகாட்டுவன  பல; ஆணும் பெண்ணும் மனம் இணைந்து வாழும் அன்பொழுக்கங்களை எடுத்துரைப்பன சில; வரலாற்றுக் குறிப்பினையும் புராண இதிகாச செய்திகளை குறிப்பிடுவன சில, பொதுவாக பழந்தமிழ் நாட்டின் வரலாற்றினை இதன் மூலமாக அறிகின்றோம்.
நற்றிணையின் அகச்சுவை நிறைந்த பாடல்களில் மக்கள் அறவாழ்வு, மன்னர் கொடை ஆட்சித்திரம், ஓருமைப்பாடு, பழந்தமிழர் பழக்க வழக்கங்கள், உவமைத்திரம், உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள், ஆகியவற்றைக் காண்கிறோம்(3). இப்பாடல்களைப் பாடியவர் பழந்தமிழர் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் கீழே காண்போம்.
எட்டுத்தொகை  நூல்களைக் குறிப்பிடும் வெண்பாவில் இதனை முதற்கண் நிறுத்தியுள்ளனர். 9 அடி முதல் 12 அடிவரையிலும் இதில் பாடல்கள் அமைந்துள்ளன. இந்நூலை தொகுத்தவர் இன்னார் என்று தெரியவில்லை. தொகைப்பித்தவர் பான்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதியார். திணை என்ற சொல் அகப்பொருள் கூறும் நூல்களுக்கு அமைந்த பெயராகும். திணை என்ற பெயரோடு  நல் என்னும் அடையும் சேர்ந்து நற்றிணை என வழங்குக்கின்றது.
நற்றிணை பாடல்களுக்கு சில எடுத்துக்காட்டை கீழே காணலாம்:
நீர் எவ்வாறு உலக வாழ்க்கைக்கு இன்றியமை யாததோ அவ்வாறே, தலைவி உயிருடன் இயங்கு வதற்குத் தலைவனது அருள் நிறைந்த காதல் நெஞ்சம் இன்றியமையாதது.
                 நீரின் றமையா  உலகம் போலத்
                   தம்மின் றமையா நன்னயந் தருளி  (பாடல்1)
செல்வக் குடியில் பிறந்த பெண் தான் புகுந்த இடத்தில் காணும் வறுமையைப் போக்க தாய் வீட்டை நாடுதல் இல்லை என்னும் சீரிய பண்பைக் கூறுகிறது பின்வரும் அடிகள்.
        கொண்ட கொழுநன் குடிவரன் உற்றெனக்
        கொடுத்த தாதை கொலுஞசோறு உள்ளாள் (பாடல்110)
இதுபோன்ற பகுதிகள் தமிழரின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் காட்டுகின்றன.
    
அகத்திணை புறத்திணை என்பன முறையே வீட்டையும், நாட்டையும் குறிப்பன(4). அகம் இன்பத்தினையும் புறம் அறம் பொருள் வீட்டினையும் குறிப்பன. கூர்ந்து கவனித்தால் அகத்தை செம்மைப்படுதுவத்தர்க்குத் துணையாகவே புறம் அமைந்துள்ள தென்பது புலனாகும். புறம் என்பதும் காவல் என்பதும் ஒன்றாகும். அறம் ஒற்றுமைக் காவலாகவும், பொருள் வேற்றுமை காவலாகவும் இருப்பன. எல்லாவுயிருக்கும் இன்பம் ஒன்றே இயல்பாகக் காணப்படுகிறது. அதனாலே, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனாரும்.
 
 
எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது  
    
 தானமர்ந்து வரூஉ மேவற் றாகும் 

என்றருளினர். இன்பமென்பது ஆணும் பெண்ணுமாகப் ஒன்றி வாழ்வது. அதுவே தலையாயதாகும். அவ்வாழ்வு ஓரறிவு முதல் ஐந்தறிவு முதலாகச் சொல்லப்படும் எல்லாவுயிர்களுக்கும் உள்ளது. ஆறறிவு படைத்த நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்தி  வழிகாட்டுவது அகன் ஐந்திணையாகும்.அகன் ஐந்திணையும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனச் சொல்லப்படும், இவை, முறையே அறம், பொருள், இன்பம், வீடு, பேறு என்னும் பயன்களை நல்கும் நிலைக்களமும் ஒழுக்கமும் ஆகும். இவையே பொருளுண்மை காட்டும் நமசிவாய என்னும் நற்றமிழ் மறைப் பொருளுமாகும்.
எட்டுத்தொகை நூல்களைப் பற்றி எழுதிய இந்தக் கட்டுரையில், எனக்கு ஏற்பட்ட பயன்களையும் அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். மேலே கூறப்பட்டுள்ள நற்றினைப் பாடல்களின் வாயிலாக ஒரு கணவன் மனைவி எவ்வாறு ஒழுக்கமுடன் வாழ வேண்டும் என்பதையும், தனி மனித வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தினையும் அறிந்து கொண்டேன். அது அந்த்தக்கால வாழ்க்கைக்கு மட்டுமல்லாது, இனி வரும் எல்லாக் காலத்திற்கும் பயனுள்ளதாக அமையும் இந்த எட்டுத்தொகைப் பாடல்கள் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.
எட்டுத்தொகைப் பாடல்களைப் பற்றி கட்டுரை எழுத எனக்கு கிடைத்த வாய்பின் மூலம், இன்னூலைப் பற்றி பெரிய அளிவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது தெரிந்த கொள்ள வாய்புக்கிட்டியதற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் இதேபோல் தமிழின் மற்ற சங்க இலக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
சான்றுக் குறிப்புகள்:
·         (1)http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88
·         (2)http://temple.dinamalar.com/news_detail.php?id=17594  
·(3)http://books.google.com.au/books?id=HJLkApp07JsC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false (டாக்டர் எம். நாராயணவேலுப்பிள்ளை)
·         (4)tamilvu.org
  
 
 
 
 
 
 
 
 
 
 

Monday, September 23, 2013

தமிழின் முச்சங்கங்களும் அவற்றின் தொடர்ச்சியும்


தமிழின் முச்சங்கங்களும் அவற்றின் தொடர்ச்சியும்
             மதுமித்தா சொக்கலிங்கம் – ஆறாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ்ப் பள்ளி,     ஹோல்ஸ்வொர்தி
 

தமிழின் முச்சங்கங்கள் தமிழ் நாட்டில் தமிழை வளர்ப்பதற்காக  ருவாக்கப்பட்ட. தலைச்சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் என்ற மூன்று வெவ்வேறு சங்கங்கள் இருந்தன. இச்சங்கங்கள் தமிழை வளர்ப்பதற்கும், கவிர்களை  ஊக்குவிப்பதற்கும், சுவைபடக் காப்பியங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும், மிகப் பெரிய பாலமாக அமைந்தன. 

அன்றைய காலத்தில், தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், தமிழ் வளர்ப்பதற்கான வழிமுறைகள் பலவற்றைக் கையாண்டார்கள். பாண்டிய மன்னரே முதன்  முதலாக அதிகார பூர்வ தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவினார்கள். இது மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது: தலைச்சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் என்பவை இவை. (1)

பல புலவர்கள் சரித்திரம் வாய்ந்த கவிதைகளையும்,காப்பியங்களையும் உருவாக்கி தமிழ்ச் சங்கங்கள் முலம், அரங்கேற்றம் செய்தனர். இதற்கு உலகப் பொதுமறை என்று புகழ்பெற்ற  திருக்குறள் ஒரு சான்றாகும். இயல், இசை,  நாடகம் போன்ற கலைகள், தமிழை மேம்படுத்துவதில் ஒரு பெரிய பங்கையளித்தன.(1)

தமிழின் தலைச்சங்கம், கி.மு. 5000ஆம் ஆண்டில்  ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கம்,  தமிழை முழுமையாக நேசித்த பழம்பாண்டிய மன்னன்  "காய்சின வழுதி" என்பவரால் நிறுவப்பட்டது. பழைய பாண்டிய நாட்டின், குமரி ஆற்றங்கரையில் அமைந்த தென் மதுரையில் இச்சங்கத்தை நிறுவினார். இச்சங்கத்தில், பல தமிழ் அறிஞர்களும் சிறப்புமிக்க தமிழ்ப் புலவர்களும், பல்வேறு துறைகளில், ஆய்வு செய்தனர். அவர்களில் அகத்தியர் தலைசிறந்த புலவராய்த் திகழ்ந்தார்(1).

திடீரென நிகழ்ந்த கடல் சீற்றத்தால் தென் மதுரையும் முதல் தமிழ்ச்சங்கமும் முழுமையாய் அழிந்து கடலுக்கு உணவாயின. தரைப்பகுதிகளாக இருந்த பாண்டிய நாடு அழிந்து தலைச் சங்கமும் தலைச்சங்க நூல்களும் அழிந்தன. (1)

இடை சங்கம் - முதல் சங்கமிருந்த தென்மதுரை அழிந்து போகவே மீண்டும் சங்கத்தை உருவாக்க எண்ணிய “பாண்டிய மன்னம் கடுங்கோன்” என்பவன் கபாடபுரத்தில் இடைச்சங்கத்தை நிறுவி தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தான். இச்சங்கம், ஏறக்குறைய 1500 ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது. (1)

இச்சங்கத்தில் அவைப் புலவர்களாகத் தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்களும் வீற்றிருந்தனர். இவர்களுக்கு அகத்தியம், மாதிரி நூலாகத் துணைபுரிந்தது. வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்றவைகளின் வாயிலாகக் கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது. மேலும் கபாடபுரம் பாண்டியனின் தலைநகரமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த துறைமுகமாகவும் திழ்ந்தது.(1)

இடைச்சங்க காலத்தில் பல இலக்கியங்களும், இலக்கண நூல்களும் வெளிவந்தன. அவைகள் பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, இசை நுணுக்கம், தொல்காப்பியம் போன்றவைகளாம். இதில் தொல்காப்பியம் தலைசிறந்த நூலாகப் போற்றப்பட்டது. (1)

மீண்டும் நடந்த கடல் சீற்றத்தால், பாண்டியநாட்டுக் கபாடபுரமும், கடலில் முழ்கியது. இதனால் இரண்டாம் சங்கம் கண்டெடுத்த மாபெரும் காப்பியங்கள் கடலில் மூழ்கின.

மூன்றாம் சங்கம் - அழிவுற்ற தமிழ்ச் சங்கத்தை மறுபடியும் உருவாக்க எண்ணிய “முடத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உருவாக்கி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தைத் தொடங்கினான். கடைச்சங்க காலம் கி.மு. 1500 முதல் கி.பி. 250 வரை. இப்பொழுது உள்ள மதுரையில் கடைச்சங்கம் நிலைபெற்றிருந்தது என இறையனார் அகப்பொருளுரை கூறுகிறது. (1)

கடைச்சங்கத்தில் 49 அவைப் புலவர்கள் தமிழாய்ந்துள்ளனர். அவர்கள் நக்கீரன், நல்லந்துவனார், சீத்தலைச்சாத்தனார் போன்றவர்கள் தலைசிறந்தவர்கள் ஆவார். கபிலர், பரணர் போன்ற பெரும்புலவர்களும் கடைச்சங்ககாலத்தவர்களே. இச்சங்கத்தில் தான் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும் இச்சங்கத்தின் இறுதிக் காலத்தில் வாழ்ந்தவரே. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கடைச்சங்கத்தில் இயற்றப்பட்டவைகளே. (1)

கடைச் சங்கத்தில், நம்மை ஆச்சரியப்படுத்தும் சில நிகழ்ச்சிகள் நடந்தன. பழைய திருவிளையாடல் புராணத்தின் மூலமாக இரு சங்கப்பலகைகள் இருந்ததாக அறியமுடிகிறது. ஒன்று "மொழியறி சங்கப்பலகை" என்றும் மற்றொன்று "பாவஹி சங்கப்பலகை” என்றும் அழைக்கப்பட்டன. பாக்களைச் சங்கப்பலகை ஏற்றால்தான் புலவர் பெருமக்கள் அப்பாக்களைப் போற்றுவார்களாம். மேலும் கடைச் சங்கத்தில் இருந்த 49 புலவர்களில் 24 புவர்களின் உருவச் சிலைகள், மதுரை அம்மன் சன்னதி எதிரே உள்ள மண்டபத் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. (2) பொய்யா மொழிப் புலவர் அச்சிலைகள் முன்பு நின்று பாடியதாகவும் அவரது பாட்டைக் கேட்டு, அச்சிலைகள் ரசித்துத் தலை அசைத்ததாகவும் அறிய முடிகிறது. (3)

சிறந்து விளங்கிய கடைச் சங்கமானது பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியின் காலத்திற்குப்பின் மறைந்தொழிந்தது. அவனுக்குப் பின் வந்த பாண்டிய மன்னர்கள், உள்நாட்டு அரசியல் குழப்பங்களினாலும், அண்டைய நாட்டு மன்னர்கள் அவர்களுடன் போர் தொடுத்ததாலும்,  தமிழை  வளர்க்க இயலாமல் போயிற்று. மேலும் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட  கடும் பஞ்சத்தால், தமிழ்ப் புலவர்கள், சேர சோழ நாடுகளை நோக்கி இடம் பெயர்ந்தார்கள்.

முச்சங்கங்களும் அழிந்த நிலையில் சுமார் 1600 ஆண்டுகளுக்குப் பின் 1901ஆம் ஆண்டில் பாண்டித்துரைத் தேவரால், மதுரை மாநகரில் நான்காம் தமிழ் சங்கம் அமைக்ப்பட்டதாகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இச்சங்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும்  முன்பு முச்சங்கங்களில் தமிழ் மொழி பெற்ற உச்சநிலையைப் போல் மீண்டும் பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காகவும் நான்காம் தமிழ் சங்கம் ஆரம்பிக்கப்பட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது. (4)  

இந்தத் தமிழ்ச் சங்கங்கள் வளர்த்த காவியங்கள், காப்பியங்கள், நமது வாழ்கைக்குத் தேவையான நல்லொழுக்க நெறிகளையும், கருத்துக்களையும்  பல வகையில் அளிக்கின்றன. இன்று இது மாணவர்கள் பயிலும் வகையில் மிக எளிமைப் படுத்தப்பட்டு கற்றுக் கொடுக்கப்படுகின்றது. நமது கலாச்சாரம் சார்ந்த அன்றாட வாழ்க்கைக்கு, உதவியாக இவை இருப்பதுடன் தாய் மொழி என்கிற மன நிறைவை எப்பொழுதும் நமக்கு ஏற்படுத்துகின்ற.   மேலும் தமிழை நமது வருங்காலச் சந்ததிகளுக்காகப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வையும் நமக்கு ஏற்படுத்துகின்றது.  நாமும் தமிழ் வளர்க்க என்றும் பாடுபடுவோம் என உறுதி எடுப்போம்

சான்றுக்குறிப்பு: