Tuesday, December 11, 2012

காதல் கீதம் - 7

பகுதி - 6
அடைக்கப்பன், சரிங்க நான் வீட்டுக்கு வரேன் என்று சொல்லி போனை கட் பண்ணினான். (மனதுக்குள்) நாம ஜானகியோட பழகுறது தெரிஞ்சிருக்குமா? நேத்து தானே ஜானகி ஸ்டடி ஹாலிடேசுக்கு வீட்டுக்கு வந்திருக்கா. சரி, தெரிஞ்சிருந்தா எப்படியாவது சமாளிப்போம் என்று எண்ணிக்கொண்டான்.

என்ன அடைக்கப்பா, “யாரிடமிருந்து போன்” என்று கேட்டாள் பூங்குழலி.

அதற்கு அடைக்கப்பன், “ஜானகியோட அப்பாவிடமிருந்து, என்கிட்ட ஏதோ பேசனுமாம், வீட்டுக்கு கூப்பிட்டிருக்காரு” என்றான்.

“அதுக்குள்ள, உங்க விஷயம் தெரிஞ்சிருக்குமா” என்றாள் பூங்குழலி.

“அதான், எனக்கும் தெரியலை. தெரிஞ்சிருந்தா எப்படியாவது சமாளிச்சுக்க வேண்டியது தான்” என்றான் அடைக்கப்பன்.

அன்று மாலை வேலை முடித்து, ஜானகியின் வீட்டுக்கு சென்றான் அடைக்கப்பன். அங்கு அவனுக்கு வரவேற்பு பலமாக இருந்தது.

ஜானகியின் தந்தை, ஜானகி, இங்க வாம்மா என்றார்.

ஜானகி வந்தவுடன், அடைக்கப்பனிடம், “தம்பி இவ தான் என் பொண்ணு, பேரு ஜானகி, பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் கடைசி வருஷம் படிக்கிறாள்” என்றார்.

அடைக்கப்பன், ஜானகியிடம் வணக்கம் என்றான்.

ஜானகியும், பதிலுக்கு வணக்கம் கூறினாள்.

ஜானகியிடம் அவளுடைய தந்தை, “தம்பியும் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு, future softwaresல வேலை செய்யுறார். நம்ம ஃபேக்டரிக்கு சாஃப்ட்வேர் பண்ணிக் கொடுக்கிறதுக்காக வந்திருக்காரு. இவரு வேறு யாரும் இல்லை, உன் பெரிய அத்தைப் பொண்ணு உண்ணாவோட செட்டியார் இருக்காரு இல்லை, அவரோட சித்திப் பையன் தான் என்று அடைக்கப்பனைப் பற்றி ஒரு பெரிய அறிமுகத்தை சொல்லி முடிச்சாரு.

ஜானகியும் ஒன்றும் தெரியாதவள் போல கேட்டுக் கொண்டாள்.

அவளுடைய தந்தை, அடைக்கப்பனிடம், தம்பி இவ ஸ்டடி ஹாலிடேசுக்காக வந்திருக்கா. ஏதோ டிஜிட்டல் பிரின்சிபல்ஸ்ன்னு, ஒரு சப்ஜெக்ட் இருக்காமே, ரொம்ப கஷ்டமா இருக்காம். நீங்க கொஞ்சம் தினமும் வந்து சொல்லிக் கொடுக்க முடியுமா என்றார்.

அப்போது தான், அடைக்கப்பன் நிம்மதி அடைந்தான். (மனதுக்குள்) நம்ம ஆளு பயங்கிரமான ஆளா இருக்கா!, தினமும் சந்திக்கிறதுக்கு வழி செஞ்சுட்டாளேன்னு சந்தோஷப் பட்டு, அதை வெளிக் காட்டாமல், அந்த பேப்பர்ல தான், நான் யூனிவர்சிட்டி ரேங்க், அதனால சொல்லிக் குடுக்கிறதுல ஒரு பிரச்சனையும் இல்லை. நாலையிலிருந்து தினமும்  சியாந்திரம் 5.30 மணியிலிருந்து, 6.30 மணி வரை சொல்லிக் கொடுக்கிறேன் என்றான் அடைக்கப்பன்.

“ரொம்ப நன்றி தம்பி” என்றார் ஜானகியின் தந்தை.

ஜானகியும் ரொம்ப நன்றிங்க என்றாள்.

“இதுக்கு போயி எதுக்கு நன்றியெல்லாம் சொல்லிக்கிட்டு, எனக்கு தெரிஞ்சதை சொல்லிக் கொடுக்கப்போறேன், அவ்வளவுதான்” என்றான் அடைக்கப்பன்.

நாளைக்கு வறேன்னு சொல்லி அங்கிருந்து கிளம்பினான்.

மறு நாள் அடைக்கப்பன் வேலை முடித்து, ஜானகியின் வீட்டுக்கு போனான். வரவேற்பறையில் ஜானகி புத்தகமும், கையுமாக தயாராக இருந்தாள். அடைக்கப்பனும் அவளுக்கு பாடத்தை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான். இடையில் அவனுக்கு பலகாரமும், காபியும் ஜானகியின் அம்மா கொண்டு வந்து கொடுத்தார்கள்.

பின்னர், ஜானகி மெல்லிய குரலில், பார்த்தீங்களா, இந்த ஏற்பாடே என்னோடது தான். எப்பூடி! என்றாள்.

அதற்கு அடைக்கப்பனும், “அம்மா தாயே! உன் அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் எல்லாம் கிடையாது” என்று கூறினான்.

“இன்னும் 2 வாரத்திற்கு நாம தினமும் சந்திச்சுக்கலாம். அதுக்கப்புறம் செமெஸ்டர் லீவுல தான் நாம எப்படி சந்திச்சுக்கலாம்னு தெரியல“ என்றாள் ஜானகி.

“முதல்ல பரீட்சையை முடி, அதுக்கப்புறம் எப்படி பார்க்கலாம்னு யோசிக்கலாம்” என்றான் அடைக்கப்பன்.

பாடங்களை படித்துக்கொண்டு, நடு நடுவில் இருவரும் மெல்லமாக தங்கள் காதலை யாருக்கும் தெரியாமல் வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படியே, இரு வாரமும் தொடர்ந்தது. ஜானகி கல்லூரிக்கு போவதற்கு முதல் நாள்,

ஜானகி, “நான் நாளைக்கு காலேஜுக்கு போகனும். திருப்பியும் ரெண்டு வாரம் கழிச்சு தான் உங்களை பார்க்க முடியும்” என்றாள்.

“நீ நம்மோட காதலைப் பற்றி யோசிக்காம நல்லா செமெஸ்டர்  செஞ்சுட்டு வா என்றான்” அடைக்கப்பன்.

“நான் செமெஸ்டரை முடிச்சுட்டு வந்தவுடன, நாம சிவகங்கை பார்க்ல சந்திக்கலாம். உங்ககிட்ட அப்ப நான் நிறைய பேசனும் என்றாள்” ஜானகி.

“நீ, திருப்பியும் இங்க வந்தவுடனே, எப்பவும் போல எனக்கு போன் பண்ணி சொல்லு, நான் ஆபிஸ்ல பர்மிஷன் போட்டு வந்து விடுறேன்” என்றான் அடைக்கப்பன்.

அதற்கப்புறம் இரண்டு வாரம் கழித்து, ஜானகி பரீட்சை முடித்து படமாத்தூருக்கு திரும்பினாள்.

அடைக்கப்பன் வேலை செய்துக் கொண்டிருக்கும் பொழுது, ஜானகி போன் பண்ணி, பூங்குழலியிடம் பேசினாள்.

பூங்குழலி, “அடைக்கப்பா உன் ஆளு இன்னைக்கு சியாந்திரம் நான்கு மணிக்கு சிவகங்கை பார்க்ல உனக்காக காத்துக்கிட்டு இருக்காளாம்” என்றாள்.

அடைக்கப்பனும் தன் டிபார்ட்மெண்ட் மேனேஜரிடம் பர்மிஷன் சொல்லி விட்டு, சிவகங்கை பார்க்குக்கு சென்றான்.

அடைக்கப்பன், “ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கியா ஜானகி” என்றான்.

“இல்லை, நானும் இப்பத்தான் வந்தேன்” என்றாள் ஜானகி.

“சரி வா, யாரும் பார்க்குறதுக்கு முன்னாடி அந்த பெஞ்ச்ல போயி உட்காரலாம்” என்று கூறி ஜானகியுடன் நடந்து அங்கிருந்த ஒரு பெஞ்ச்சில் போய் உட்கார்ந்தான் அடைக்கப்பன்.

“எப்படி எக்ஸாம் எல்லாம் செஞ்ச?” என்று கேட்டான்.

“நல்ல செஞ்சிருக்கேன். எப்படியும் இந்த செமெஸ்டர்ல எண்பது சதவீதத்துக்கும் மேல வரும்” என்றாள் ஜானகி.

“எங்க நீ என்னைய காதலிக்க ஆரம்பிச்சதுனால, படிப்பில கவனத்தை சிதற விட்டுடுவியோன்னு பயந்தேன்” என்றான் அடைக்கப்பன்.

“பொதுவா எல்லோரும் சொல்லுவாங்க, காதலிக்க ஆரம்பிச்சா நம்மளால படிக்க முடியாதுன்னு, ஆனா நான் உங்களை காதலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் நல்லா படிக்க முடியுது” என்றாள் ஜானகி.

“உண்மையான காதல் எப்பவுமே நம்மளை மேல தூக்கி தான் விடுமே தவிர கீழே இறக்காது” என்றான் அடைக்கப்பன்.

“என்னோட நெருங்கிய தோழிகளுக்கு எல்லாம் பெரிய ஆச்சிரியம் என்னன்னா, கிட்ட தட்ட ஆறு மாசமா நாம காதலிச்சாலும், உங்க விரல் கூட என் மேல பட்டதே இல்லையா, எப்படி உங்களால அப்படி காதலிக்க முடியுதுன்னு கேட்கிறாங்க” என்றாள் ஜானகி.

“என்னைய பொருத்தவரைக்கும் ஜானகி, “கல்யாணத்துக்கு முன்னாடி வர்ற காதல்ல, கண்ணும் மனசும் தான் கலக்கனும். அத விட்டுட்டு ஸ்பரிசிக்கிறது, முத்தம் கொடுக்கிறது இதெல்லாம் உண்மையான காதலே இல்லேன்னு சொல்வேன். இந்த காதல்ல, உடம்பு உள்ள நுழையவே கூடாது” என்றான்.

“கல்யாணதுக்கு அப்புறம் வர்ற காதல் எப்படி இருக்கனுமாம்” என்று கேட்டாள் ஜானகி.

“கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற காதல்ல, மனசோட உடம்பும் சம்பந்தப்பட்டிருக்கு. முதல்ல மனசு ரெண்டும் இரண்டறக் கலந்தாத்தான், ஈருடல் ஓர் உடலாகும். இங்கேயும் மனசு தான் முதல்ல, அதக்கப்புறம் தான் உடம்பு. மனசு ரெண்டும் கலக்காம, உடம்பு மட்டும் கலந்ததுன்னா, அதுல காதல் இருக்காது, காமம் மட்டும் தான் இருக்கும்” என்றான் அடைக்கப்பன்.

“அப்பா! விட்டா காதலுக்கு இலக்கணமே எழுதுவீங்க போல. இப்படி நீங்க பேசுறதை கேக்கும்போது, என் மனசுல நீங்க உயர்ந்து கிட்டே போறீங்க. சரி, இன்னைக்கு ஏதாவது ஒரு கவிதையை சொல்லுங்களேன்” என்றாள் ஜானகி.

“இந்தப் பூக்களை வைத்து ஒரு கவிதை சொல்கிறேன் கேள்” என்று கூறி, கவிதையை சொல்ல ஆரம்பித்தான் அடைக்கப்பன்.


           “உலகத்துலே தாங்கள் தான்

           மிக அழகானவர்கள் என்று

           கர்வம் கொண்டு தலை

           நிமிர்ந்து நிற்கும் இந்த

           பூக்கள் உன்னைக் கண்டவுடன்

           தங்களை விட அழகான ஒரு

           பூ இருக்கிறதா என்று வியந்து

           கர்வப்பட்டதற்காக வெட்கப்பட்டு

           தலை குனிந்துக்கொண்டன”.

“ஆஹா!, அருமை அருமை. என்னைய விட அழகானவங்க எல்லாம் இருக்காங்களே” என்றாள் ஜானகி.

“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுங்கிற மாதிரி, என் கண்ணுக்கு நீ தான், உலக அழகி” என்றான் அடைக்கப்பன். 

“என்னைய புகழ்ந்தது போதும், என்னோட கடைசி செமெஸ்டர் முடிஞ்சவுடனே, நம்மோட விஷயத்தை வீட்டுல சொல்லிடலாம்” என்றாள் ஜானகி.

“நம்ம கல்யாணத்தைப் பற்றி கவலைப் படாதே, ரெண்டு பேரும் ஒரே இனங்கிறதுனால ஒரு பிரச்சனையும் இருக்காது” என்றான் அடைக்கப்பன்.

“அப்படித்தான் நானும் நினைக்கிறேன்பா, எங்க வீட்டுல உங்க மேல ஒரு நல்ல அபிப்பிராயம்” இருக்கு.

“ஐயா மேல யாருக்கு தான் நல்ல அபிப்பிராயம் இருக்காது” என்றான் அடைக்கப்பன்.

“நினைப்பு தான் புழைப்ப கெடுக்கும்னு சொல்லுவாங்க. சரி முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன் பாருங்க! எங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்க நாங்க இந்த சனிக் கிழமை சென்னைக்கு போறோம் “ என்றாள் ஜானகி.

“ஓ! அப்படியா, அப்ப நான் எங்க சென்னை ஆபிஸ்ல வேலை இருக்கிற மாதிரி ஒரு ஸீன் போட்டு, வெள்ளிக்கிழமையே சென்னைக்கு போறேன். நீங்க எப்ப மணி வீட்டுக்கு, அதான் உங்க அத்தை பொண்ணு வீட்டுக்கு வருவீங்கன்னு சொல்லு,அப்ப நான் உங்க எல்லாரையும் எங்க வீட்டுக்கு கூப்பிடுறேன். எங்க வீடும் பக்கத்துல தான் இருக்கு” என்றான் அடைக்கப்பன்.

“சரிப்பா, வந்து ரொம்ப நேரம் ஆச்சு, வீட்டுல சிவகங்கைக்கு போயி ஃப்ரெண்டை பார்த்துட்டு வறேன்னு சொல்லிட்டு வந்தேன், அதனால நான் கிளம்புறேன். சென்னைல பார்க்கலாம்” என்று கிளம்பினாள் ஜானகி .

“சரி, பார்த்து போயிட்டு வா, நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்புறேன்” என்றான் அடைக்கப்பன்.

இவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்த பெஞ்ச்சுக்கு பின்னாடி உள்ள பெஞ்ச்சில் உட்கார்ந்து இவர்களோட உரையாடல் எல்லாத்தையும்  கேட்டுக் கொண்டிருந்த ஒரு உருவம், இவர்கள் போன பின்பு மெதுவாக எழுந்து போனது.
- [தொடரும்]                                                                                    பகுதி - 8

No comments:

Post a Comment