Wednesday, October 31, 2012

காதல் – எதிர் வீட்டு நிலவு


நிலவு
உன்னைப் பார்க்காதவர்கள்

சொன்னார்கள்,

அமாவாசை அன்று

நிலவு வராது என்று!!

 

நாணம்

 உன் பெண்மை பேசும்

முதல் வார்த்தை.

 
அன்று வழக்கத்திற்கு மாறாக வேலையிலிருந்து மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்து, கதவை தட்டுவதற்காக கையை உயர்த்தினேன். கதவு தானாக திறந்தது. எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய். உன்னை பார்த்த அந்த நொடியில், தனக்கான தேவதையை கண்டுப்பிடித்து விட்டதாக எண்ணி, என் இதயம் சந்தோசத்தில் தாறுமாறாக இயங்க ஆரம்பித்து விட்டது. உள்ளிருந்து கதவை திறந்த நீயும், வெளியில் நான் நிற்பதை பார்த்து, ஒரு நொடி பேச்சு மூச்சின்றி நின்று விட்டாய். பிறகு சுதாரித்து, என் கண்களைப் பார்த்து, “நீங்க!” என்று இழுத்தாய். பேசும் சக்தியை இழந்து விட்ட நான், உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் இருந்து பதில் வராததால், நீயே பின்பக்கம் திரும்பி, அத்தே! யாரோ வந்திருக்கிறார்கள் என்று கூறினாய். என் அம்மாவும் உள்ளிருந்தபடியே, என்னைப் பார்த்து, அது வேறு யாரும் இல்லை, என் மகன் தான் என்று கூறினார்கள். நீயும், என்னை நன்றாக பார்த்து, ஒரு புன்னகையை எனக்கு அளித்துவிட்டு, நான் போயிட்டு வரேன் அத்தை, என்று கூறிக்கொண்டு, என்னை தாண்டி கொண்டு, வேகமாக ஓடினாய். நானோ என் மனதுக்குள், உன் வாய் சிரித்ததா, இல்லை உன் கண்கள் சிரித்ததா என்று ஒரு பட்டிமன்றத்தை நடத்திக் கொண்டு வீட்டிற்குள் சென்றேன். என் அம்மாவோ, என்னடா! இவ்வளவு சீக்கிரமா வந்துட்ட, உடம்பு முடியவில்லையா என்று கேட்டார்கள். நான் அதற்கு பதில் கூறாமல், ஏம்மா! உன் அண்ணனுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா என்ன?. என்கிட்ட சொல்லவே இல்ல! என்றேன். என் அம்மாவும் ஒன்றும் புரியாமல் என்னடா சொல்ற என்று கேட்டார்கள். அதான், இப்ப போன பொண்ணு உன்னைய அத்தைன்னு இல்ல சொல்லிட்டு போகுது என்றேன். டேய், உன் குறும்புக்கு ஒரு அளவே இல்லையா, அந்த பொண்ணு நம்ம எதிர் வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கிறவங்களோட பொண்ணு என்று கூறினார்கள். சரி, என்ன முடியலையா, இவ்வளவு சீக்கிரம் வேலையிலிருந்து வந்துட்ட என்று மீண்டும் கேட்டார்கள். ஆமாம்மா, ஒரே தலைவலி அதான் வந்துட்டேன். காப்பி கொஞ்சம் கொடு, குடிச்சுட்டு, தூங்கி எழுந்தால் சரியா போய்விடும் என்று கூறிக்கொண்டு என் அறைக்குள் சென்று, ஜன்னலைத் திறந்தேன். எதிர் வீட்டில் நீயும் உன் அறையின் ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு, என் அறையையே பார்த்துக்கொண்டிருந்தாய். நான் உன்னைப் பார்த்ததும், மீண்டும் ஒரு வெட்கச் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு உள்ளுக்குள் சென்று மறைந்து விட்டாய். அப்பொழுது, காபியை எடுத்துக்கொண்டு வந்த என் அம்மா, இன்னைக்கு அமாவாசை, நான் கோயிலுக்கு போகணும். நீ காபியை குடிச்சுட்டு, தூங்கு, நான் வீட்டை பூட்டிக்கிட்டு போய் வருகிறேன் என்று சொன்னார்கள். நானோ, இன்னைக்கு பௌர்ணமி தானே என்றேன். என்ன உளர்ற, இன்னைக்கு அமாவாசை என்றார்கள். நானும் உடனே எதிர் வீட்டைப் பார்த்தபடி, ஆமாம், ஆமாம், பௌர்ணமி தான் மறைஞ்சிடுச்சே, அப்ப அமாவாசை தான் என்று சொன்னேன். என் அம்மாவும் என்னையும், உன் வீட்டையும் மாறி மாறி பார்த்துவிட்டு, இன்னைக்கு வந்ததிலிருந்து நீ ஒழுங்காவே இல்லை. காபியை குடிச்சுட்டு நல்லா தூங்கு என்று கூறிவிட்டு சென்றார்கள். நானும் பகல் கனவில் உன்னோடு என்ன பேசலாம் என்று எண்ணிக்கொண்டே காபியை குடிக்க ஆரம்பித்தேன்.

Sunday, October 28, 2012

இரு பச்சிளம் குழந்தைகள் – வெவ்வேறு சூழ்நிலையில்

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தினப்பத்திரிக்கையில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை பற்றிய வெவ்வேறு செய்தியை படிக்க நேர்ந்தது. இவ்விரு செய்திகளும், நான் மிக சமீபத்தில் பதித்த என் முதல் சிறுகதையான “தாய்மை”யுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறது.  
முதல் செய்தி, சென்னை மெரீனா கடற்கரையில், உழைப்பாளர் சிலையின் பின்புறத்தில், அனாதையாக வீசப்பட்டு கிடந்த, பச்சிளம் குழந்தையை பற்றியது.
நான் என் கதையில், மனைவி என்ற அந்தஸ்தை காட்டிலும், தாய்மை என்ற அந்தஸ்து தான் ஒரு பெண்ணை பெருமை பட வைக்கிறது என்று கூறியிருப்பேன். ஆனால், இந்த செய்தியை படித்தபிறகு, இப்படியும் ஒரு கல் நெஞ்சம் கொண்ட தாய் இருப்பாளோ என்று எண்ண வைக்கிறது. அந்த பெண்ணை தாய் என்று சொல்வதை காட்டிலும் ஒரு அரக்கி என்று சொன்னால் தான் சரியா இருக்கும். அந்த குழந்தை வேண்டாம் என்று நினைத்திருந்தால் அது உருவாகாமலே தடுத்திருந்திருக்கலாம். அப்படியும் மீறி அந்த குழந்தை பிறந்து விட்டது எனும்போது, குறைந்தபட்சம் அநாதை ஆசிரமத்திலையாவது அந்த குழந்தையை சேர்திருந்திருக்கலாம். இது எதுவுமில்லாமல், கடற்கரை சாலையில் பொம்மையை வீசி எறிகிற மாதிரி, அந்த குழந்தையை வீசி எறிந்து விட்டு சென்றிருக்கிறாள் அந்த தாய் உருவில் இருந்த அரக்கி. கடற்கரையில் அதுவும் ஒரு மறைவிடத்தில், எத்தனை வகையான ஜந்துக்குள் இருக்கும், நாய்கள் திரியும். இதில் ஏதாவது ஒன்று கடித்திருந்தால்,அந்த குழந்தை என்னவாகியிருக்கும். அந்த குழந்தை எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்கிற ஒரு மனப்பான்மை தான் தெரிகிறது அந்த அரக்கியிடம். நல்ல வேளை, அந்த குழந்தைக்கு எதுவும் ஆகாமல், கடற்கரையில் ரோந்து வந்த போலீசார் கண்டெடுத்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அந்த அரக்கிக்கு குழந்தையாய் வந்து பிறந்தது தான் அந்த குழந்தை செய்த பாவமா?
அடுத்த செய்தி, பிறந்து ஒரு மாதமே ஆன, பச்சிளம் குழந்தை தாமினி, தன் ஏழை ரிக்ஷா தொழிலாளி தந்தையை, லட்சாதிபதி ஆக்கியுள்ளதைப் பற்றியது.
பொதுவாகவே, பெண்களுக்கு, பிரசவம் என்பது மறு ஜென்மம் எடுப்பது போன்றதாகும். கிட்டதட்ட, 99.9 சதவீத பெண்கள் நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். அந்த .1 சதவீத பெண்கள் பிரசவத்தில் இறந்து விடுகிறார்கள். என் தாய்மை கதையில் வருகிற மாதிரியே உண்மையில் ஒரு பெண்ணும் பிரசவத்தில் இறந்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூர் நகர வீதிகளில், சைக்கிள் ரிக்ஷா ஓட்டி, பிழைப்பு நடத்தி வந்தவர், பப்லு. கடந்த மாதம் 20ஆம் தேதி, அவரின் மனைவி பிரசவத்தில், மிகக் குறைந்த எடையில் ஒரு பெண் குழந்தையை அவருக்கு பெற்றுக் கொடுத்துவிட்டு இறந்து விட்டார். அந்த பெண் குழந்தையை அவர் சுமை என்று நினைக்காமல், தன் தோளில் தூளி ஒன்றை கட்டி, அதில் குழந்தையை தொங்க விட்டவாறு, ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். மிகுந்த பாசத்துடன் அந்தக் நோஞ்சான் குழந்தையை, பப்லு வளர்த்து வருவதைக் கண்ட, தனியார் "டிவி' நிருபர், அதை செய்தியாக, "டிவி'யில் வெளியிட, பப்லுவின் நிலைமையே மாறிவிட்டது. நோய்வாய்ப்பட்டிருந்த குழந்தை தாமினியை, தங்கள் மருத்துவமனையில் சேர்த்த தனியார் மருத்துவமனை, இலவசமாக "இங்குபேட்டரில்' வைத்து, உயிர் காக்கும் சிகிச்சை அளித்து, குழந்தையைக் காப்பாற்றி விட்டது. அந்தக் குழந்தையை, பப்லு எப்படி வளர்க்கப் போகிறார் என்ற கவலையில், நல்ல உள்ளம் படைத்த பலரும் அவருக்கு உதவி செய்ய முன்வந்து, அவரின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினர். ராஜஸ்தான் மாநில அரசு, குழந்தையின் மருத்துவச் செலவை ஏற்க முன்வந்தது. வங்கி ஒன்று, பப்லுவுக்கு, 10 ஆயிரம் ரூபாயில், புதிய ரிக்ஷா வாங்கிக் கொடுக்க முன்வந்துள்ளது. ஜெய்ப்பூர் மாவட்ட கலெக்டர், "என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்' என உறுதி அளித்துள்ளார். அந்த குழந்தையின் தந்தை பப்லு தற்போது லட்சாதிபதியாகி விட்டார். அவர், அந்த பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டி:
"இந்தப் பணத்தை வைத்து, தாயில்லாத என் குழந்தையை நன்றாக  வளர்த்து, நன்றாக படிக்க வைத்து, உயர்ந்த நிலைமைக்கு    ஆளாக்குவேன்'   என, உறுதியளிக்கிறார் பப்லு.அவர் மேலும்     கூறியதாவது:என்      குழந்தையை வைத்து பிச்சை எடுக்க, நான்      விரும்பவில்லை. நல்ல      முறையில் வளர்க்க விரும்புகிறேன். பெண்      குழந்தைகளைப் புறக்கணிக்கும் இந்த சமுதாயத்தில், என்னைப் பார்த்து பலரும் மனம்      மாற வேண்டும்.தோளில் தூளி கட்டி, அவளை   வளர்க்க நான்     தயாரானேன். என் நிலையைப் பார்த்து, வருந்திய பலரும் உதவி    செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி".இவ்வாறு அவர்   தெரிவித்துள்ளார்.
ஒரு குழந்தையோ தாயிருந்தும், அந்த தாயின் அன்பு கிடைக்காமல் அநாதை ஆசிரமத்தில் வளர்கிறது. மற்றொரு குழந்தையோ, பிறக்கும்போதே, தாயை இழந்து, தாயுமானவராக இருக்கும் தன் தந்தையிடம் வளர்கிறது.  இந்த வேறுபாட்டில் தான் ஆண்டவனுடைய படைப்பின் சூட்சமம் இருக்கிறது.  இந்த சூட்சமத்தை தெரிந்து கொண்டால், நாமும் ஞானிகள் தான்.   

Tuesday, October 23, 2012

மதுரை ஆதீன மடம் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்து விட்டது

திருஞானசம்பந்தர் உருவாக்கிய மதுரை ஆதீன மடம் இன்று -???

மேல சொன்ன பதிவுக்கு, பாலோஅப் தான் இந்த பதிவு. 
மதுரை ஆதீன மடம் கடந்த  சில மாதங்களாக கேவலமான மனிதர் ஒருவரின் பிடியினால் இருட்டறையில் தவித்து வந்தது. தற்போது அவர் பிடியிலிருந்து விடுபட்டு, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு கோடி ரூபாய் கொடுத்து தான் இளைய ஆதீனப் பதவியை பெற்றிருக்கிறார் என்று நான் முன்பு சொன்னது தவறு. ஒரு கோடி ரூபாய் என்ற சிறு மீனைப் போட்டு,ஆயிரம் கோடி ரூபாய் என்ற பெரிய திமிங்கலத்தை பிடிக்கப்பார்க்கிறாரோ என்ற ஒரு சந்தேகம் அப்போது இருந்தது. ஆனால் அந்த மனிதர் லேசுப்பட்டவரா என்ன! தூண்டிலைக் கூட போடாமல், பெரிய திமிங்கலத்தையே பிடிக்கப் பார்த்திருக்கிறார் என்பது, மூத்த ஆதீனம் அவர்கள் அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, "அந்த மனிதர், ஆதீன மடத்துக்கு நூறு கோடி ரூபாய் தருவதாகவும், அதில் ஐந்து கோடி ரூபாய் உடனே தருவதாகவும் கூறினார், ஆனால் ஒரு பைசா கூட இது நாள் வரை அவர் தரவில்லை. அவர் ஒரு மிகப் பெரிய பொய்யர்" என்று அந்த பேட்டியில் மூத்த ஆதீனம் சொல்லியிருக்கிறார். இப்படி சொன்ன சொல்லை கூட காப்பாற்றாமல் இருந்திருக்கிறார் அந்த கேவலமான மனிதர். மேலும், புதிதாக ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து, அந்த அறக்கட்டளை தான் இனி மடத்துச் சொத்தான ரூபாய் ஆயிரம் கோடியை பராமரிக்கும் என்று அறிவித்திருந்தார். நல்ல வேளை, அந்த கேடுகெட்ட மனிதரை இளைய ஆதீன பொறுப்பிலிருந்து தூக்கியவுடன், அந்த அரக்கட்டளையையும் மூத்த ஆதீனம் கலைத்து விட்டார்.

இந்த பதிவை பதிப்பதற்கு முன், நான் ஒரு பத்திரிக்கையில் படித்த ஒரு கட்டுரை , மீண்டும் மனதை நெருடச் செய்துள்ளது. அதாவது, இளைய மடாதிபதி பொறுப்பிலிருந்து அந்த ஒழுக்கங்கெட்ட மனிதரை நீக்கியதே ஒரு நாடகமாக இருக்கலாமோ என்று ஒரு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது அந்த கட்டுரை. இதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும். இனியும் அந்த பழமையான மடத்தின் பெருமை குன்றாமல் இருக்க வேண்டும் என்பது தான் எல்லோரின் விருப்பம்.

பின்குறிப்பு:

நான் அந்த கேவலமான மனிதரின் பெயரை சொல்லாததற்கு காரணம், அவருடைய பேரை எழுதி, என் கையை அசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்பதால் தான். மேலும் அந்த மனிதருக்கு மரியாதை கொடுப்பது ஊடக தர்மத்தின் அடிப்படையில் தான்.

Sunday, October 21, 2012

தாய்மை – 4

 
டாக்டர் கவிதாவும், மரகதத்திடம், “பெரியம்மா, நீங்க பாட்டியாக போறீங்க. உங்க மருமகளுக்கு நாற்பத்தைந்து நாள் ஆயிருக்கு. நீங்க டாக்டர் மணிமேகலையிடமே இனிமே செக்கப் பண்ணிக்கிங்க. அப்புறம் ஆறு வருஷம் கழிச்சு உண்டாகியிருக்கிறதுனால உங்க மருமகளை நல்லா பார்த்துக்குங்க” என்று கூறினார்.
“ரொம்ப சந்தோஷம் டாக்டர். நல்ல செய்தியை சொன்ன உங்க வாயிக்கு சர்க்கரையை தான் போடணும். கண்டிப்பா, என் பொண்ணு மாதிரி நான் நல்லா பார்த்துப்பேன் டாக்டர்” என்று கூறி தேவசேனாவை கூட்டிக்கொண்டு வெளியே வந்தாள் மரகதம்.
தேவசேனாவிடம், “முதல்ல அந்த முனைல இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்கு போவோம்” என்று கூறியபடியே அந்த பிள்ளையார் கோவிலுக்கு தேவசேனாவை கூட்டிக் கொண்டு போனாள் மரகதம்.
வீட்டிற்கு திரும்பியவுடன், மரகதம், “தேவசேனா, நீ போயி ரெஸ்ட் எடுத்துக்க. நான் ராத்திரிக்கு சேமியா பாயாசம் பண்ணி வைக்கிறேன். அப்புறம், இப்பவே உன் புருஷனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லிடாதே. அவன் ராத்திரி வந்தவுடனே, நேர்லேயே சொல்லு. அப்பத்தான் அவன் சந்தோசப்படுறதை நீ பார்க்க முடியும்” என்றாள்.
இரவு, வெங்கடாச்சலமும், முருகனும் கடையை சாத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
முருகன் அவர்களுடைய அறைக்கு சென்றவுடன், பின்னாடியே சென்ற தேவசேனா, அந்த அறை கதவை மூடிவிட்டு, அவனை கட்டிப்பிடித்து, அவன் முகம் முழுவதும், முத்தம் மழை பொழிந்தாள். இந்த திடீர் முத்தமழையில், முருகன் திக்குமுக்காடிப் போனான். பிறகு அவளிடமிருந்து விலகி,
“என்ன தேவ்ஸ், இன்னைக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்கே. அப்புறம்  சேலை வேற கட்டியிருக்கே. எப்பவும் நைட்டி தானே போட்டிருப்பே, என்ன விஷயம்” என்று கேட்டான்.
தேவசேனா, தன் சேலையை சற்று விலக்கி, அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து, தன் கண்களை அவன் கண்களோடு கலக்க விட்டாள்.
அந்த வெட்கப் பார்வையும், தன் கையை எடுத்து அவள் வையிற்றில் வைத்துக் கொண்டிருப்பதையும், முருகனுக்கு விஷயத்தை புரியவைத்தது. இருந்தாலும், அவள் வாயிலிருந்து அந்த விஷயத்தை கேட்க ஆசைப்பட்டவன் போல,
“என்னம்மா, நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலே சொல்லலை” என்றான்.
“அதான், பதில் சொல்லிட்டேனே” என்றாள் அவளும்.
“எங்க சொன்ன? ஒண்ணுமே சொல்லாம என் கையை எடுத்து உன் வயித்தில வச்சுக்கிட்டு இருக்கே. வயித்தை வலிக்குதா” என்று எதுவும் புரியாத மாதிரி கேட்டான் முருகன்.
“ச்சீ சுத்த மோசம்பா நீங்க. எல்லா விஷயத்தையும் எனக்கு சொல்லிக்குடுத்துட்டு, இப்ப ஒண்ணும் புரியாத மாதிரி நடிக்கிறீங்க. சரி, என் வாயல சொல்லணும் அவ்வளவுதானே. நீங்க அப்பாவாக போறீங்க” என்று வெட்கத்தோடு சொன்னாள் தேவசேனா.
அவன் அவளை, அப்படியே தூக்கி ஒரு சுத்து சுத்தி, இறக்கி விட்டு, “பாரு இப்ப நீயும் அம்மாவாக போறே. என்ன நமக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு. இதுக்கு போய் மனசை கஷ்டபடுத்திக்கிட்டு.... சரி, இப்ப நீ வாயும்  வயிறுமா இருக்க. உனக்கு என்ன வேணும்” என்று கேட்டான்.  
“இந்த சந்தோஷமே, எனக்கு பெரிய சந்தோஷம். இதுக்கு மேல எனக்கு வேற எதுவும் வேண்டாம். அதோடு, நீங்க எனக்காக உங்கம்மாக்கிட்ட எதிர்த்து பேசுனீங்க பாருங்க, அது போதும். இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும்,நீங்க தாங்க எனக்கு புருஷனா வரணும்” என்று தொண்டை அடைக்க கூறினாள்.
“ஏய், என்ன திடீர்னு செண்டிமெண்டா பேசுற” என்று கேட்டான்.
அதற்கு தேவசேனா, “எல்லா பெண்களும், தன்னைப் பத்தி மாமியார் ஏதாவது அநியாயமாக பேசுனா, தன் கணவன் தன் சார்பா பேசணும்னு நினைப்பாங்க. எனக்கு, உங்கம்மா, உங்களை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிங்கன்னு சொல்லும்போது, நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு பயந்துக்கிட்டு இருந்தேன். ஆனா அழகா அவுங்க வாயை அடைச்சு, என் மனசுல பாலை வார்த்தீங்க. இந்த குழந்தையை பெத்துக்கொடுத்துட்டு, நான் செத்துப்போனா கூட, உங்களோடு நூறு வருஷம் சேர்ந்து வாழ்ந்த திருப்தி இருக்குமுங்க” என்று கூறினாள்.
“என்னது இது, ஒரு நல்ல விஷயத்தை சொல்லிட்டு, சாவு,கீவுன்னு பேசிக்கிட்டு. இன்னொரு தடவை, உன் வாயிலிருந்து இந்த மாதிரி வார்த்தை வர கூட புரிஞ்சுதா” என்று அதட்டினான் முருகன்.
அங்கே, வரவேற்பறையில், மரகதம் தன் கணவனிடம், தேவசேனா உண்டாகியிருப்பதை பத்தி பேசிக்கொண்டிருந்தாள்.
அதற்கு பிறகு வந்த நாட்களில், மரகதம், தேவசேனாவை ஒரு வேலையும் செய்ய விடவில்லை. மரகதமே எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள்.
மரகதமும், முருகனும், தேவசேனாவும் செக்கப்புக்கு சென்றபோது, டாக்டர் தேவசேனாவை பரிசோதித்துவிட்டு, எல்லோரிடமும்,
“தேவசேனாவுக்கு பிரஷர் இருக்குது. அதனால அவ பெட் ரெஸ்ட்லேயே இருக்கட்டும் என்று சொல்லி, தேவசேனாவிடம், இங்க பாரும்மா, எல்லாப் பொண்ணுங்களுக்கும் முத பிரசவம் கொஞ்சம் பயமாக தான் இருக்கும். ஆனா நீ ரொம்பவே பயப்பிடுற. நார்மலா இரு. மனசுக்கு இதமான நல்லா இசையை கேளு. எல்லாம் நல்ல படியா நடக்கும் என்றார்.
உடனே மரகதம், “ஏன் டாக்டர், பெருசா பிரச்சனை எதுவும் இல்லையேன்னு” தன் சந்தேகத்தை கேட்டாள்.
டாக்டரும், “ஒண்ணும் பயப்பிடுறதுக்கு இல்லை. ஆறு வருஷம் கழிச்சு உண்டாகியிருக்கிறதுனால, குழந்தை நல்லபடியா பிறக்குமான்னு ரொம்ப பயப்பிடுறாங்க”, வேற ஒண்ணும் இல்லை. என்றார்.
வீட்டுக்கு திரும்பும் வழி எல்லாம், மரகதமும், முருகனும் அவளுக்கு தைரியம் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை வெங்கடாச்சலம், மரகதத்திடம்,
“என்ன! மரகதம், மருமகளை ஒரு வேலையும் செய்ய விடாம, எல்லா வேலையும் நீ தான் செய்யுற போல” என்று கேட்டார்.
அதற்கு மரகதமும், அவ பிள்ளத்தாச்சியா இருக்கா, போதாக்குறைக்கு அவளுக்கு பிரஷர் வேற. அவளைப் போய் எப்படிங்க எல்லா வேலையும் செய்யச் சொல்றது. பாவம், அவளுக்கு அவ ஆத்தா இருந்தா, இந்நேரம் அங்க போய் சவுகரியமா இருப்பா. அதான், அவ அங்க இருக்கிற மாதிரியே, இங்க இருக்கணும்னு தான், அவளை ஒரு வேலை செய்ய சொல்றதில்லை” என்றாள்.
சரி, அவளுக்கு இப்ப ஆறு மாசம் நடக்குது. அவளை அவுங்க அண்ணன் வீட்டுக்கு அனுப்புறியா, இல்ல, நம்மலே இங்க பிரசவம் பார்த்துடுவோமா?” என்று கேட்டார் வெங்கடாச்சலம்.
“எனக்கு, அவுங்க அண்ணன் வீட்டுக்கு அனுப்புறதுக்கு இஷ்டமே இல்லை. நமக்கு ஒரு பொண்ணு இருந்தா, நாம பிரசவம் பார்ப்போம் இல்ல. இவளும் நம்ம பொண்ணு தான். பேசாம நாமளே இங்கேயே பிரசவம் பார்த்துடுவோம். எதுக்கும் அவளையும் ஒரு வார்த்தை கேப்போம்” என்றாள் மரகதம்.
“அட!மருமக என்னையிலிருந்து உன் பொண்ணா ஆனா? உன் பொண்ணுன்னு நினைச்சிருந்தா, அன்னைக்கு உம் மவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்றதை பத்தி பேசுவியா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார் வெங்கடாச்சலம்.
அதற்கு மரகதம், “நான் தான் இப்ப மாறிட்டேன் இல்ல!,சும்மா அதையே சொல்லாதீங்க. இந்த குடும்பத்துக்கு வாரிசு இல்லாம போயிடுமோன்னு பயத்துல தான் அன்னைக்கு அப்படி பேசுனேன். இப்ப, நான் அவளை என் பொண்ணாதான் பார்க்குறேன்” என்றாள்.
“சரி, சரி, நீ மாறினது ரொம்ப சந்தோஷம். உன் பொண்ணை கூப்பிடு, அவக் கிட்டயே அண்ணன் வீட்டுக்கு போறியான்னு கேப்போம்” என்றார்.
உடனே மரகதமும், “தேவசேனா, முருகா இரண்டு பேரும் சத்த இங்க வந்துட்டு போங்கப்பா” என்றாள்.
முருகனும், தேவசேனாவும் அவர்கள் அறையை விட்டு வந்தார்கள்.
வெங்கடாச்சலம், தேவசேனாவிடம், “ஏம்மா, பிரசவத்தை இங்கேயே வச்சுக்கலாமா, இல்ல உங்க அண்ணன் வீட்டுக்கு போறியாம்மா” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டார்.
தேவசேனாவும்,”நான் இங்கேயே இருக்கத்தான் மாமா விரும்புறேன். என்னைய அத்தை தங்கத் தட்டுல வச்சு தாங்கு தாங்குன்னு தாங்குறாங்க. எங்க அண்ணி கூட இந்த அளவுக்கு என்னைய பார்த்துக்க மாட்டாங்க. நான் இங்கேயே இருந்துடுறேனே மாமா. இல்ல, முத பிரசவம் தாய் வீட்டில தான் நடக்கணும்னு நினைச்சிங்கன்னா, நான் எங்க அண்ணன் வீட்டுக்கு போறேன்” என்றாள்.
“அம்மாடி, பேசாம நீ இங்கேயே இருந்துடு. டேய் முருகா, நீ அவுங்க அண்ணன் வீட்டுக்கு போனை போட்டுக்கொடு, நான் பேசி சொல்லிடுறேன்” என்றார் வெங்கடாச்சலம்.
தேவசேனா, பிரசவத்துக்கான நாளை நெருங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு, பிரசவ வலி எடுத்து, எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று, தேவசேனாவை அட்மிட் பண்ணி வெளியே காத்திருந்தார்கள்.
“முருகா, உன் மச்சினனுக்கு, போன் செஞ்சு தேவசேனாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம்னு சொல்லிடு” என்றார் வெங்கடாச்சலம்.
கொஞ்ச நேரத்திற்கு பிறகு, தேவசேனாவிற்கு பிரசவம் பார்த்த டாக்டர் வெளியே வந்து முருகனிடம்,”உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு என்றார். பிறகு, எங்களால சின்ன உசுரைத்தான் காப்பாத்த முடிஞ்சுது. பெரிய உசுரை காப்பாத்த முடியலை. இந்த மாதிரி சூழ்நிலைல, நாங்க பெரிய உசுரைத் தான் முதல்ல காப்பாத்த பார்போம். ஆனா இவுங்க விஷயத்துல, எங்களால அவுங்களை காப்பாத்த முடியலை” என்றார்.
முருகன் அப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்துவிட்டான்.
உடனே, மரகதம், “என் மருமக குழந்தையை கொடுத்துட்டு, போய் சேர்ந்துட்டாளா. ஐயோ, நானே என் மருமகளே கொன்னுட்டானே. இவரு அப்பவே சொன்னாரு ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு. நான் கேட்டிருந்தா, இந்நேரம் என் மருமக உயிரோடு இருந்திருப்பாளேன்னு” ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.
வெங்கடாச்சலம் தான், மரகதத்தையும், முருகனையும் சமாதானப்படுத்தி, பிரசவ அறைக்கு கூட்டிக்கிட்டு போனார்.
அங்கே, தேவசேனா, தான் பெண்ணாய் பிறந்ததுக்கான முழுமையை அடைந்து விட்டோம், இந்த ஜென்மத்திற்கு அதுவே போதும் என்ற எண்ணத்தில், தான் பெற்றெடுத்த செல்வத்தையும், தன் காதல் கணவனையும், தந்தையாக இருந்த மாமனாரையும், கடைசிக் காலத்தில் தாயாக மாறிய மாமியாரையும் என்று எல்லோரையும் தவிக்கவிட்டுட்டு மறைந்து விட்டாள்.
பக்கத்தில் இருந்த அவள் பெற்ற செல்வமோ, “அம்மா, என்னை இந்த உலகத்துக்கு காட்டுவதற்காக, நீ இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டாயே” என்று சொல்லாமல் அழுதுக் கொண்டிருந்தது.
[முற்றும்]